தமிழக கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிகள் -300 காலியிடங்கள்


தமிழக கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிகள் -300 காலியிடங்கள்
x
தினத்தந்தி 21 Jan 2020 11:27 AM GMT (Updated: 21 Jan 2020 11:27 AM GMT)

தமிழக கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்களுக்கு 300 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படும், கீழ்க்காணும் தலைமை கூட்டுறவு சங்கங்கள்- வங்கிகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற தகுதியான ஆண் பெண் விண்ணப்ப தாரர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப் படுகிறது. மொத்தம் 300 பேர் சேர்க்கப்படுகிறார்கள்.

அதிகபட்சமாக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, சென்னை-1-ல் 176 இடங்களும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை-4-ல் 57 இடங்களும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை-18-ல் 58 இடங்களும் உள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையிலான பணியிடங்கள் விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 1-1-2019 அன்ற 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித்தகுதி

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ராணுவத்தில் பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணமாக ரூ. 250 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்த கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. கட்டண விலக்கு பெறுபவர்கள் அதற்குரிய சான்றுகளை இணைக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள். எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்களுடன் 170 மதிப்பெண்களுக்கு நடைபெறும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் பதிவு செய்யலாம். அப்போது புகைப்படம், கையொப்பம் மற்றும் அவசியமான சான்றுகள் குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் வருகிற பிப்ரவரி 1-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.tncoopsrb.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Next Story