பரஸ்பர நிதி துறையில், 2019-ஆம் ஆண்டில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 68 லட்சம் உயர்வு


பரஸ்பர நிதி துறையில், 2019-ஆம் ஆண்டில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 68 லட்சம் உயர்வு
x
தினத்தந்தி 23 Jan 2020 10:02 AM GMT (Updated: 23 Jan 2020 10:02 AM GMT)

முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் 2019 டிசம்பர் இறுதியில் மொத்த கணக்குகள் 8.71 கோடியை எட்டி உள்ளது. 2018 டிசம்பர் இறுதியில் அது 8.03 கோடியாக இருந்தது. ஆக, ஓராண்டுக் காலத்தில் கணக்குகளின் எண்ணிக்கை 68 லட்சம் உயர்ந்துள்ளது...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு             
 
மும்பை

பரஸ்பர நிதி துறையில், கடந்த 2019-ஆம் ஆண்டில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 68 லட்சம் உயர்ந்துள்ளது.

நிர்வகிக்கும் சொத்து

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

பரஸ்பர நிதி துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் இத்துறையின் சொத்து மதிப்பு சரிவடைகிறது.

ரூ.27.05 லட்சம் கோடி

சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தத் துறையின் சொத்து மதிப்பு ரூ.27.05 லட்சம் கோடி என்ற புதிய எல்லையை தொட்டு இருந்தது. டிசம்பர் மாதத்தில் அது 2 சதவீதம் குறைந்து ரூ.26.54 லட்சம் கோடியாக இருக்கிறது.

எனினும், அடுத்த 10 ஆண்டுகளில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என ஏ.எம்.எப்.ஐ. அமைப்பு கூறி உள்ளது. இதே காலத்தில் இத்துறையில் 10 கோடி முதலீட்டாளர்கள் இருப்பார்கள் என அந்த அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.

2015-16-ஆம் நிதி ஆண்டில் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 59 லட்சம் உயர்ந்தது. 2016-17-ஆம் ஆண்டில் கணக்குகள் 67 லட்சம் அதிகரித்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் 1.6 கோடி புதிய கணக்குகள் தொடங்கப்பட்டது. இதனையடுத்து முதலீட்டாளர் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 7.13 கோடியை தாண்டியது. கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் முதலீட்டாளர் கணக்குகள் 1.11 கோடி உயர்ந்தது. இதனையடுத்து கணக்கு களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8.24 கோடியாக உயர்ந்தது.

8.71 கோடியை எட்டியது

2015 காலண்டர் ஆண்டில் முதலீட்டாளர் கணக்கு கள் 56 லட்சம் உயர்ந்தது. 2016-ஆம் ஆண்டில் 70 லட்சம் அதிகரித்தது. 2017-ல் 1.36 கோடி புதிய கணக்குகள் தொடங்கப்பட்டன. 2018-ல் 1.38 கோடி புதிய கணக்குகள் உருவாயின.

முதலீட்டாளர் கணக்கு களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் 2019 டிசம்பர் இறுதியில் மொத்த கணக்குகள் 8.71 கோடியை எட்டி உள்ளது. 2018 டிசம்பர் இறுதியில் அது 8.03 கோடியாக இருந்தது. ஆக, ஓராண்டுக் காலத்தில் கணக்குகளின் எண்ணிக்கை 68 லட்சம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் தற்போது 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அனுமதி வேண்டி செபி அமைப்பிடம் விண்ணப்பித்து வருகின்றன. எனவே இனி வரும் மாதங்களிலும் முதலீட்டாளர் கணக்குகள் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய முதலீட்டாளர்கள்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதைக் காட்டிலும் பரஸ்பர நிதி திட்டங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

Next Story