மின்விளக்கின் தந்தை...!


மின்விளக்கின் தந்தை...!
x
தினத்தந்தி 11 Feb 2020 8:45 AM GMT (Updated: 11 Feb 2020 8:45 AM GMT)

இன்று (பிப்ரவரி 11-ந்தேதி) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள். அறிவியல் உலகில் அதிக கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார்.

மின்விளக்கு, திரைப்படக்கருவி, கிராமபோன் உள்பட இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1,300. அவற்றில் 1,093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார் என்றால் மலைப்பாக இருக்கிறது அல்லவா?. தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவில் ஒஹயோ மாநிலத்தில் மிலான் என்கிற நகரத்தில் 1847-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் சாமுவேல் எடிசன், தாயார் பெயர் நான்சி.

எடிசன் சிறு வயதில் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனால் அவரது எட்டாவது வயதில்தான் கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்ல முடிந்தது. ஒரு சில மாதங்களுக்குப்பிறகு ஒருநாள் எடிசனின் ஆசிரியர் எடிசன் மூளைக்கோளாறால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரால் படிப்பை தொடரமுடியாது என்று கூறி அவரை வீட்டுக்கு திருப்பி அனுப்பி விட்டார்.

இதனால் மன வேதனை அடைந்த எடிசனின் தாயார் தன் மகன் எதிர்காலம் பாழாகி விடக்கூடாது என்று நினைத்து வீட்டிலிருந்தே மகனுக்கு கல்வியறிவு புகட்டினார். கூடவே ஊக்கமளிக்க கூடிய வகையில் அறிவுரைகள் வழங்கினார். உதாரணமாக, ‘எதற்கும் அச்சப்படாதே, தொடர்ந்து முயற்சி செய். தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள், கற்றுக்கொள்வதை நிறுத்திக் கொள்ளாதே, தொடர்ந்து உன்னை மேம்படுத்திக் கொள்’ இப்படிப்பட்ட மேன்மையான அறிவுரைகளால் பள்ளிக்கூடம் காணாத அச்சிறுவன் மனிதகுலம் போற்றும் ஒப்பற்ற அறிவியல் மேதையானார்.

1859-ம் ஆண்டு தனது பன்னிரண்டாவது வயதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்த எடிசன் ரெயிலில் செய்தித்தாள்கள், காய்கறிகள், பழங்களை விற்கத்தொடங்கினார். அவற்றின் மூலம் கிடைத்த சிறிய லாபத்தில் இருந்து அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள், இதழ்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கினார்.

1859-ல் ரெயிலில் பத்திரிகை அச்சடித்து பயணிகளுக்கு விற்பனை செய்யும் வாய்ப்பு அவருக்குகிடைத்தது. அதனை நல்லமுறையில் பயன்படுத்த நினைத்த எடிசன் ரெயிலின் கடைசி பெட்டியில் அச்சு எந்திரம் ஒன்றை நிறுவி, தினந்தினம் சுடச்சுட செய்திகளுடன் செய்தித்தாளை அச்சடித்து பயணிகளுக்கு வழங்கினார். இதன் மூலம் அவருக்கு கணிசமான வருவாய் கிடைத்தது. அதே பெட்டியில் இன்னொரு புறத்தில் ரசாயன பரிசோதனைகள் செய்வதற்காக ஆராய்ச்சி கூடம் ஒன்றை நிறுவினார். பத்திரிகை வேலைகள் இல்லாத சமயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒரு முறை வேதிப்பொருளொன்று சிந்தியதால் ஏற்பட்ட விபத்தில் அந்த ரெயில் பெட்டி தீப்பிடித்தது. ரெயிலின் நடத்துனர் கோபப்பட்டு எடிசனின் கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டார். இதனால் அவருக்கு காது கேட்கும் திறன் குறைந்தது. (சிறுவயதில் ஏற்பட்ட நோயினால் காதுகள் பழுதடைந்தடைந்தன என்ற இன்னொரு செய்தியும் உண்டு). இந்த பின்னடைவால் எடிசன் சற்றும் மனம் தரவில்லை.

ஒரு முறை ரெயிலில் அடிபட இருந்த மூன்று வயது குழந்தை ஒன்றை தாவி குதித்து மயிரிழையில் காப்பாற்றினார். அக்குழந்தையின் தந்தை எடிசனுக்கு வாய் வார்த்தைகளால் மட்டும் நன்றி சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்பொழுது புழக்கத்திலிருந்த தந்தி எந்திரத்தை, மோர்ஸ் குறியீடு மூலம் இயக்குவது எப்படி என்று விளக்கி சொல்லிக்கொடுத்தார். வார்த்தைகள் டாட் (புள்ளி), டேஷ்(கோடு) என்கிற ஒலி சத்தங்களாக, உருவாக்கப்பட்டு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஒலிபரப்பப்பட்டது. இதனை கற்றதனால் தந்தி அலுவலகமொன்றில் வேலை கிடைத்தது. தந்தி எந்திரத்தின் செயல்பாட்டினை எப்படி செம்மைப்படுத்துவது என ஆராய்ந்தார். இதில் வெற்றியும் பெற்றார். இவர் படைத்த புதிய எந்திரத்தின் காரணமாக இவருக்கு பெரும் பணம் சுமார் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் தந்தி அலுவலகத்தில் வேலையை விட்டுவிட்டு தனது நேரத்தை முழு நேரமும் அறிவியல் கண்டு பிடிப்பு பணிக்கு பயன்படுத்தினார். உலகில் எத்தனையோ அறிவியலாளர்கள் பல கண்டுபிடிப்புகளை இம்மானிட சமுதாயத்திற்கு தந்திருந்தாலும் இவர்களில் முதன்மையானவராக விளங்குபவர் தாமஸ் ஆல்வா எடிசன். அறிஞர்களின் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் செல்வத்தை ஈட்டித்தரும் என்கின்ற வியாபார தன்மையை முதன்முதலாக உணர்த்தியவர் எடிசன். கண்டுபிடிப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கில், முதல் ஆராய்ச்சி சாலையை நியூஜெர்சி மாகாணத்தில் நெவார்க் நகரில் 1870-ல் நிறுவினார். அவர் கண்டுபிடிப்புகள் ஏராளமாக இருந்தாலும் கூட இன்றைக்கும் நாம் பெருமளவில் பயன்படுத்துகின்ற ஒலி, ஒளி சாதனங்களுக்கு எல்லாம் அவர்தான் தந்தை. ஒலியை பதிவு செய்து மீண்டும் ஒலிக்க செய்யும் போனோகிராப் என்கிற ஒலி வரைவியை கண்டுபிடித்தவர்.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தாலும் அதனைக் கொண்டு ஒளியூட்டக்கூடிய வழிமுறைகளுக்கு அறிவியல் உலகம் பெரும் முயற்சி செய்து கொண்டிருந்த காலத்தில் எடிசனின் பங்கு ஈடு இணையற்றது. தான் வசித்து வந்த நியூயார்க் நகரில் வீடுகளிலும், வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது அவருடைய ஆசை. ஆனால் அந்த ஆசை எளிதில் நிறைவேறும் என்று மற்ற விஞ்ஞானிகள் நம்பவில்லை. ஒளிரக்கூடிய பல்புகளை கண்டுபிடித்தவர். வெற்றிட கண்ணாடி குமிழிக்குள் ஒளிரும் தன்மைகள் கூடிய இழைகள் வழியாக மின்சாரம் செலுத்தப்படும் போது வெளிச்சம் கிடைக்கிறது. அதற்கு முன்பே இதற்கான முயற்சிகளில் பல ஆண்டுகளாக பலர் ஈடுபட்டிருந்தாலும்கூட நீண்டநேரம் எரியக்கூடிய குறைந்த விலையில் தயாரிக்கும் வகையில் கார்பன் மயமாக்கப்பட்ட மூங்கில் இழைகளை பயன்படுத்தி உலகிற்கு ஒளி காட்டினார் எடிசன். நியூயார்க் உலகிலேயே மின்மயமாக்கப்பட்ட முதல் நகரமானது.

மின்சாரத்தை சேமிக்கக்கூடிய மின்சக்தி சேமிப்புக் கலங்களை கண்டுபிடித்த பெருமையும் அவருக்கு உண்டு. இன்றைய உலகம் ஒலி, ஒளி இவைகளில் மூழ்கி இருக்கிறது. இதற்கு வித்திட்டவர் தாமஸ் ஆல்வா எடிசன் முதல் முதலாக நகரும் படத்தை (திரைப்படத்தை) உருவாக்கும் கினெட்டாஸ்கோப் கருவியை கண்டுபிடித்தவர் எடிசன்.

தன்னுடைய 84-வது வயதில் 1931 அக்டோபர் 18-ந் தேதி நியூ ஜெர்சி மாகாணத்தில் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 21-ந் தேதி மாலை அமெரிக்கா முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மின் விளக்குகளை நிறுத்தும்படி ஆணையிட்டார். அந்த ஒரு நிமிடம் நாட்டில் உள்ளோர் அனைவரும் எடிசனையும் அவரது கண்டுபிடிப்புகளையும் அமைதியாய் நினைவு கூர்ந்தனர்.

இன்று அவருடைய பிறந்த நாள். இன்று மாலை வீட்டில் ஒளியேற்றும் போது அவரை நினைத்துக் கொள்வோம்.

- கோ. ஒளிவண்ணன், எழுத்தாளர்.

Next Story