ஜனவரி மாதத்தில் கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் ரூ.202 கோடி நிகர முதலீடு 7 ஆண்டுகளில் இல்லாத முன்னேற்றம்


ஜனவரி மாதத்தில் கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் ரூ.202 கோடி நிகர முதலீடு 7 ஆண்டுகளில் இல்லாத முன்னேற்றம்
x
தினத்தந்தி 13 Feb 2020 8:41 AM GMT (Updated: 13 Feb 2020 8:41 AM GMT)

நம் நாட்டைப் பொறுத்தவரை பொதுவாக தங்கமும், பங்கும் நேர் எதிர் திசைகளில் பயணம் செய்கின்றன.

புதுடெல்லி

கடந்த ஜனவரி மாதத்தில் கோல்டு ஈ.டி.எப். எனும் தங்க பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.202 கோடி நிகர முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது. இது 7 ஆண்டுகளில் இல்லாத முன்னேற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டு வாய்ப்பு

பரஸ்பர நிதி துறையின் தங்க பரஸ்பர நிதி திட்டம் தங்கத்தை வாங்காமலேயே அதில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. தங்க நாணயங்கள், கட்டிகள், நகைகள் போன்றவற்றை நேரில் வாங்கும்போது அதன் தரத்தை மதிப்பீடு செய்வது சிரமம். மேலும் அவற்றை பாதுகாத்து வைப்பதில் இடர்பாடுகள் உள்ளன. அதே சமயம் தங்க பரஸ்பர நிதி திட்டங்கள் வாயிலாக முதலீடு செய்யும்போது இதுபோன்ற சிக்கல்கள் கிடையாது.

இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் யூனிட்டுகள் வழங்கப்படும். அவை பங்குச்சந்தைகளிலும் பட்டியலிடப்படுகின்றன. எனவே அந்த யூனிட்டுகளை பங்குகளை போன்று எளிதில் வாங்கவும், விற்பனை செய்யவும் முடியும்.

தொடர் வெளியேற்றம்

நம் நாட்டில் தொடர்ந்து 6 நிதி ஆண்டுகளாக கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் இருந்து முதலீடு தொடர்ந்து வெளியேறி வந்திருக்கிறது. 2013-14-ஆம் ஆண்டில் இத்திட்டங்களில் இருந்து ரூ.2,293 கோடி விலக்கப்பட்டது. 2014-15-ல் ரூ.1,475 கோடியும், 2015-16-ல் ரூ.903 கோடியும் வெளியேறியது. 2016-17-ல் ரூ.775 கோடி விலகியது. 2017-18-ஆம் ஆண்டில் இந்தத் திட்டங்கள் ரூ.835 கோடியை இழந்தன. சென்ற நிதி ஆண்டில் (2018-19) ரூ.412 கோடி வெளியேறி இருக்கிறது.

2013 காலண்டர் ஆண்டில் கோல்டு ஈ.டி.எப். திட்டங்களில் இருந்து ரூ.1,815 கோடி வெளியேறியது. 2014-ல் ரூ.1,651 கோடியும், 2015-ல் ரூ.891 கோடியும் விலகியது. 2016-ல் இத்திட்டங்கள் ரூ.942 கோடியை இழந்தன. 2017-ல் ரூ.730 கோடியும், 2018-ல் ரூ.571 கோடியும் வெளியேறியது. 2019-ஆம் ஆண்டில் நிகர அடிப்படையில் கோல்டு ஈ.டி.எப். திட்டங்கள் ரூ.16 கோடியை ஈர்த்தன.

கடந்த ஆண்டில் ஜூலை மாதம் முடிய கோல்டு ஈ.டி.எப். திட்ட முதலீடுகள் திரும்ப பெறப்பட்டு வந்தன. எனினும் ஆகஸ்டு மாதத்தில் ரூ.145 கோடி முதலீடு வந்தது. செப்டம்பரில் ரூ.44 கோடி ஈர்க்கப்பட்டது. ஆனால் அக்டோபர் மாதத்தில் ரூ.31 கோடி விலகியது. நவம்பரில் ரூ.7.68 கோடி அளவிற்கு முதலீடு இருந்தது. டிசம்பர் மாதத்தில் ரூ.27 கோடி ஈர்க்கப்பட்டது.

ரூ.202 கோடி முதலீடு

இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது மாதமாக இப்பிரிவில் நிகர அடிப்படையில் ரூ.202 கோடி முதலீடு வந்திருக்கிறது. மேலும் 7 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் அதிக அளவு முதலீடு பெறப்பட்டுள்ளது. இதற்கு முன் 2012-ஆம் ஆண்டில் ரூ.474 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு இருந்தது.

நம் நாட்டைப் பொறுத்தவரை பொதுவாக தங்கமும், பங்கும் நேர் எதிர் திசைகளில் பயணம் செய்கின்றன. அதாவது பங்கு வர்த்தகம் ஏற்றம் பெறும்போது தங்கம் விலை பொதுவாக குறைந்து விடும். பங்குச்சந்தைகள் சரிந்தால் தங்கம் விலை உயர வாய்ப்பு உள்ளது.

ஓரளவு பாதுகாப்பானது

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story