சென்செக்ஸ் 350 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 93 புள்ளிகள் உயர்ந்தது


சென்செக்ஸ் 350 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 93 புள்ளிகள் உயர்ந்தது
x
தினத்தந்தி 13 Feb 2020 9:06 AM GMT (Updated: 13 Feb 2020 9:06 AM GMT)

செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 350 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

மும்பை

செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 350 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 93 புள்ளிகள் உயர்ந்தது.

முக்கிய புள்ளிவிவரங்கள்

டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் பங்குகளில் முதலீடு அதிகரித்தது. நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருந்ததுடன், வெளி நிலவரங்களும் சாதமாக இருந்தன. அத்துடன் பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு வெளிவர இருந்த முக்கிய புள்ளிவிவரங்கள் பற்றிய எதிர்பார்ப்பும் இணைந்து கொள்ள சந்தைகள் ஏற்றம் கண்டன.

அந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் நுகர்பொருள் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.90 சதவீதம் உயர்ந்தது. அடுத்து எரிசக்தி மற்றும் வங்கி ஆகிய துறைகளின் குறியீட்டு எண்கள் தலா 0.76 சதவீதம் முன்னேறின. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 22 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 8 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் இந்துஸ்தான் யூனிலீவர், கோட்டக் மகிந்திரா பேங்க், நெஸ்லே இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 22 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் பாரத ஸ்டேட் வங்கி, இண்டஸ் இந்த் பேங்க், சன் பார்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், டைட்டான், என்.டி.பி.சி. உள்பட 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 349.76 புள்ளிகள் ஏற்றம் கண்டு 41,565.90 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 41,671.86 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 41,330.85 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 977 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1535 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 182 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,678 கோடியாக உயர்ந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அது ரூ.2,468 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 93.30 புள்ளிகள் முன்னேறி 12,201.20 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,231.75 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 12,144.30 புள்ளிகளுக்கும் சென்றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story