2018-19 வேளாண் பருவத்தில் உணவு தானியங்கள் உற்பத்தி 28.52 கோடி டன்னாக உயர்வு புதிய சாதனை அளவை எட்டியது


2018-19 வேளாண் பருவத்தில் உணவு தானியங்கள் உற்பத்தி 28.52 கோடி டன்னாக உயர்வு புதிய சாதனை அளவை எட்டியது
x
தினத்தந்தி 14 Feb 2020 8:43 AM GMT (Updated: 14 Feb 2020 8:43 AM GMT)

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுடெல்லி

2018-19 வேளாண் பருவத்தில் (ஜூலை-ஜூன்) உணவு தானியங்கள் உற்பத்தி 28.52 கோடி டன்னாக உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டி உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி) வேளாண் துறையின் பங்களிப்பு 15 சதவீத அளவிற்கே உள்ளது.

நம் நாட்டில் வேளாண் பருவம் என்பது ஜூலையில் தொடங்கி ஜூன் மாதத்தில் நிறைவடைகிறது. இதில் கரீப், ரபி ஆகிய பருவங்களில் பயிர் சாகுபடி நடைபெறுகிறது. கரீப் பருவம் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் நிறைவடைகிறது. அக்டோபர்-மார்ச் மாத காலம் ரபி பருவமாகும்.

இறுதி மதிப்பீடு

கடந்த 2017-18 வேளாண் பருவத்தில் (ஜூலை-ஜூன்) நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள் உற்பத்தி 28.50 கோடி டன்னாக இருந்தது. 2018-19 பருவத்தில் தானியங்கள் உற்பத்தி 28.52 கோடி டன்னை எட்டி இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சகத்தின் இறுதி மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

வேளாண் அமைச்சகத்தின் தற்போது வெளியிட்டுள்ள மற்ற மதிப்பீடுகள் வருமாறு:-

2018-19 பருவத்தில் அரிசி உற்பத்தி 11.65 கோடி டன்னை எட்டி இருக் கிறது. 2017-18 பருவத்தில் அது 11.27 கோடி டன்னாக இருந்தது. கோதுமை விளைச்சல் (9.99 கோடி டன்னில் இருந்து) 10.36 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. எனினும் சிறுதானியங்கள் மகசூல் (4.70 கோடி டன்னில் இருந்து) 4.31 கோடி டன்னாக குறைந்து இருக்கிறது.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள் உற்பத்தி (2.54 கோடி டன்னில் இருந்து) 2.20 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் விளைச்சல் அதிக மாற்றமின்றி 3.15 கோடி டன்னாக உள்ளது. கரும்பு மகசூல் (37.99 கோடி டன்னில் இருந்து) 40.54 கோடி டன்னாக அதிகரித்து இருக்கிறது.

இவ்வாறு வேளாண் அமைச்சகத்தின் இறுதி மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2019-20 பருவத்தில் மொத்தம் 29.11 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் கரீப் பருவத்தின் பங்கு 14.79 கோடி டன்னாகவும், ரபி பருவத்தின் பங்கு 14.32 கோடி டன்னாகவும் இருக் கும் என மதிப்பிடப்பட்டு இருக் கிறது. இதில் 10.05 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அரிசி உற்பத்தி இலக்கு 11.60 கோடி டன்னாக உள்ளது. 2.63 கோடி டன் பருப்பு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. சிறுதானியங்கள் உற்பத்தி இலக்கு 4.83 கோடி டன்னாக இருக்கிறது. 3.61 கோடி டன் அளவிற்கு எண்ணெய் வித்துக்கள் விளையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல், கோதுமை

விவசாய துறையின் மொத்த உற்பத்தியில் நெல், கோதுமை போன்ற பயிர்களின் பங்கு சுமார் 60 சதவீதமாக உள்ளது. கால்நடைகள் மற்றும் வன விளைபொருள்களின் பங்கு முறையே 20 சதவீதம் மற்றும் 8.5 சதவீதமாக இருக்கிறது. கடல் உணவுப் பொருள்களின் பங்கு 5.5 சதவீதமாக உள்ளது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) வேளாண் துறையின் வளர்ச்சி 2.9 சதவீதமாக குறைந்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் அது 3.4 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் (2016-17) 6.3 சதவீதமாக இருந்தது.

வளர்ச்சி மதிப்பீடு

நடப்பு 2019-20-ஆம் ஆண்டில் விவசாயத் துறை 3.1 சதவீதம் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (2019 ஏப்ரல்-ஜூன்) இத்துறையின் வளர்ச்சி 2 சதவீதமாக இருந்தது. செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் அது 2.1 சதவீதமாக உயர்ந்தது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story