ரூ.150 கோடி மதிப்பிற்கான பங்குகளை வாங்க தாமஸ் குக் முடிவு


ரூ.150 கோடி மதிப்பிற்கான பங்குகளை வாங்க தாமஸ் குக் முடிவு
x
தினத்தந்தி 28 Feb 2020 10:40 AM GMT (Updated: 28 Feb 2020 10:40 AM GMT)

தாமஸ் குக் நிறுவனம் ரூ.150 கோடி மதிப்பிற்கான தனது பங்குகளை திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது.

மும்பை

தாமஸ் குக் நிறுவனம் ரூ.150 கோடி மதிப்பிற்கான தனது பங்குகளை திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது.

நிறுவன உரிமையாளர்கள் பொதுவாக தமது பங்கு மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள விரும்பும்போதும், மூலதன சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும்போதும் பொது சந்தையில் உள்ள பங்குகளை திரும்ப வாங்குகின்றனர். ஒரு நிறுவனப் பங்கின் விலை கடும் வீழ்ச்சி கண்டிருக்கும் நேரத்தில், அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியும் நிறுவனர்கள் பங்குகளை திரும்ப வாங்குவது உண்டு. ஒரு நிறுவனத்தின் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்போதும் முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகள் திரும்ப வாங்கப்படுகின்றன.

தாமஸ் குக் (இந்தியா) நிறுவனம் இப்போது ரூ.150 கோடி மதிப்பிற்கான தனது பங்குகளை திரும்ப வாங்க உத்தேசித்துள்ளது. இதற்கு அதன் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தில் மொத்தம் 2,60,86,956 பங்குகள் தலா ரூ.57.50 என்ற விலையில் வாங்கப்பட உள்ளன. இப்பங்கின் நேற்றைய சந்தை நிலவரத்தை விட இது 16 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது தாமஸ் குக் நிறுவனப் பங்கு ரூ.50-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.50.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.48.05-க்கும் சென்றது. இறுதியில் ரூ.49.35-ல் நிலைகொண்டது. இது, புதன்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 1.69 சதவீத சரிவாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story