நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரி வேலை


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரி வேலை
x
தினத்தந்தி 16 March 2020 10:02 AM GMT (Updated: 16 March 2020 10:02 AM GMT)

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 315 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக என்.எல்.சி. என அழைக்கப் படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 259 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர், மைனிங், ஜியாலஜி, நிதி, எச்.ஆர். போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக மெக்கானிக்கல் பிரிவில் மட்டும் 125 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 75 இடங்களும் உள்ளன.

பணியிடங்கள் உள்ள என்ஜினீயரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், ஜியாலஜி, நிதி, சி.ஏ., சி.எம்.ஏ., முதுநிலை படிப்புடன் எச்.ஆர். டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 1-3-2020-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.854 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ரூ.354 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 18-ந் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. ஏப்ரல் 17-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இதற்கான தேர்வு மே 26, 27-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nlcindia.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

நிதி பிரிவில் 56 பணிகள்

இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி இண்டஸ்ட்ரியல் டிரெயினி (நிதி) பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 56 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிக்கு சி.ஏ., ஐ.சி.ஏ.ம்.ஏ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 26-ந் தேதியாகும்.

இது பற்றிய விவரங்களையும் மேற்குறிப்பிட்டு உள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


Next Story