தமிழக கூட்டுறவு வங்கிகளில் 469 பணியிடங்கள்


தமிழக கூட்டுறவு வங்கிகளில் 469 பணியிடங்கள்
x
தினத்தந்தி 16 March 2020 10:13 AM GMT (Updated: 16 March 2020 10:13 AM GMT)

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 469 உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 133 பணியிடங்களும், இந்த மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பல்வேறு நகர, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 113 இடங்களும் நிரப்பப் படுகின்றன.

மேலும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 62 இடங்களும், கடலூர் மாவட்டத்தில் 64 இடங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 97 இடங்களும் நிரப்பப்படுகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கிகள், கிளைகள் வாரியான காலியிட விவரங்கள், இட ஒதுக்கீடு அடைப் படையிலான காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 1-1-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித் தகுதி

பட்டப்படிப்பு படித்தவர்கள், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்றவர்கள், ராணுவத்தில் பணி செய்து, பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் :

விண்ணப்ப பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இந்த கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அப்போது புகைப்படம், கையொப்பம், சாதிச் சான்று, கூட்டுறவு பட்டய பயிற்சி சான்று, பட்டப்படிப்பு சான்று, கட்டண ரசீது உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றுகளையும் குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

காஞ்சீபுரம் மாவட்ட பணி களுக்கு மார்ச் 31-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.kpmdrb.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இது போல நாமக்கல் மாவட்டத்திற்கு மார்ச் 31-ந் தேதிக்குள்ளும், திருப்பூர் மாவட்ட பணிகளுக்கு ஏப்ரல் 6-ந் தேதிக்குள்ளும், கடலூர் மாவட்ட பணிகளுக்கு மார்ச் 31-ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்டத்திற்கு எழுத்துத் தேர்வு நடை பெறும் நாள் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Next Story