தினம் ஒரு தகவல் : டிரைவர் இன்றி தானாக ஓடும் கார்


தினம் ஒரு தகவல் : டிரைவர் இன்றி தானாக ஓடும் கார்
x
தினத்தந்தி 17 March 2020 8:45 AM GMT (Updated: 17 March 2020 8:45 AM GMT)

பெரும்பாலான வாகன விபத்துகளுக்கு காரணமே டிரைவர்களின் அலட்சியம் அல்லது அவர்களது உடல் அசதிதான் என கண்டறியப் பட்டுள்ளது. சோர்வே காணாத ரோபோ எந்திரம் போன்ற தொழில்நுட்பத்தை டிரைவர் இல்லாத கார்களுக்கு பயன்படுத்தினால் என்ன என்பதன் விளைவாக உருவானதுதான் டிரைவர் இல்லாத கார்.

2011-ம் ஆண்டிலிருந்து ரோபோ கார்கள் அதாவது டிரைவர் இல்லாத கார்களை இயக்கிப் பார்ப்பதற்கு அனுமதி வேண்டும் என்று கூகுள் நிர்வாகம் வலியுறுத்தியது.

2012-ம் ஆண்டு மே மாதம் இதற்கான அனுமதியை நெவடா மாகாணம் அளித்தது. இதைத் தொடர்ந்து டிரைவர் இல்லாத காரை தனது தொழில்நுட்பம் முழுவதையும் பயன்படுத்தி டொயோடா பிரியஸ் காரில் சோதித்து பார்த்தது கூகுள்.

இந்தியாவில் பொக்ரான் போல, அமெரிக்காவில் நெவடா மாகாணம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தான் அமெரிக்கா பெரும்பாலும் அணுகுண்டு சோதனைகள் நடத்துவது வழக்கம். இதைத் தொடர்ந்து தங்கள் மாகாணத்திலும் டிரைவர் இல்லாத காரை சோதித்துப் பார்க்க அனுமதி அளித்தது புளோரிடா மாகாணம். பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு கூகுள் நிறுவனம் தனது டிரைவர் இல்லாத காரை வெளி உலகுக்கு அறிமுகம் செய்தது.

இந்தக் காரில் காரின் இலக்கணமாக கருதப்படும் ஸ்டீரிங் வீலும் கிடையாது, ஆக்ஸிலேட்டரோ, கிளட்சோ கிடையாது என்பது தான் விசேஷமாகும். இந்தக் காரை உருவாக்கும் குழுவின் தலைவராக இருப்பவர் செபாஸ்டியன் தருண். இவர் ஸ்டான்போர்டு ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் ஆய்வகத்தின் முன்னாள் இயக்குனர் ஆவார். கூகுள் ஸ்டிரீட் வியூ உருவாக்கத்தில் இவருக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. இந்த கார் உருவாக்கத்தில் 15 பேர் அடங்கிய வல்லுனர் குழு ஈடுபட்டது. இந்தக் கார்களில் 1.5 லட்சம் டாலர் மதிப்புள்ள மின்னணு தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. லிடார் சிஸ்டம் கருவியும் அடங்கும்.

இந்தக் காரில் 64 வெலோடைன், 64 பீம் லேசர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த லேசர் கருவிதான் காரைச் சுற்றி முப்பரிமாண பதிவை வரைபடமாக காருக்கு அனுப்புகிறது. அந்த வரைபடம் ஏற்கனவே காரில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிக துல்லியமான வரைபடத்துடன் பொருத்திப் பார்த்து காரை செயல்படுத்தும். இதுவரை இந்த கார் சோதனை ஓட்டத்தில் 2 லட்சம் நிறுத்த விளக்குகளில் நின்று புறப்பட்டுள்ளது. 6 லட்சம் சாலை எச்சரிக்கை விளக்குகளை கடந்துள்ளன. சாலையில் இந்த காரை 18 லட்சம் பிற வாகனங்கள் கடந்து சென்றுள்ளன.

இதுவரை நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் 12 சிறு சிறு விபத்துகளை இந்த டிரைவர் இல்லாத வாகனங்கள் சந்தித்துள்ளன. இந்த தவறுகளும் ஆளில்லா காரினால் ஏற்பட்டதல்ல. பிற வாகன ஓட்டிகளின் கவனக் குறைவால் நிகழ்ந்தவைதான். 8 முறை நிகழ்ந்த விபத்துகள் அனைத்துமே பின்புறத்திலிருந்து வாகனங்கள் மோதியதால் நிகழ்ந்தவை.

விபத்தில்லா உலகம் படைக்க இத்தகைய தொழில்நுட்பம் வரவேற்கத்தக்கதே. இனி இங்குள்ள தொழிற்சாலைகளும் கூகுள் தொழில்நுட்பத்தோடு டிரைவர் இல்லா கார்களை தயாரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Next Story