தினம் ஒரு தகவல் : வாகன எரிபொருள் சிக்கனத்துக்கு....


தினம் ஒரு தகவல் : வாகன எரிபொருள் சிக்கனத்துக்கு....
x
தினத்தந்தி 18 March 2020 9:16 AM GMT (Updated: 18 March 2020 9:16 AM GMT)

பெட்ரோலும், டீசலும் கச்சா எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் அல்ல. இன்னும் 30-40 ஆண்டுகளில் தீர்ந்துபோகக்கூடியது. இந்தியாவில் கச்சா எண்ணெய் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றது. அதனால், காலாகாலத்துக்கும் பெட்ரோல், டீசலை சார்ந்து நாம் இயங்க முடியாது.

எரிபொருளை குறைவாகப் பயன்படுத்துவதால் இன்னும் அதிக ஆண்டுகளுக்கு அது தீர்ந்துபோகாமல் பார்த்துக்கொள்ள முடியும். பெட்ரோல், டீசலை சேமிப்பதன் மூலம் எரிபொருள் செலவு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றை குறைத்து, பணத்தையும் சேமிக்க முடியும்.

வாகனத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பழுதுநீக்கி பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் 20 சதவீத மைலேஜ் குறையும். பெட்ரோல்-டீசலை குறைவாக பயன்படுத்த வாகன டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தை பராமரிக்க வேண்டும். காற்றழுத்தம் குறைந்து இருந்தால், எரிபொருள் செலவு அதிகரிக்கும். வேகத்துக்கு ஏற்ப வாகனத்தின் கியரைத் தொடர்ந்து மாற்றி இயக்க வேண்டும். வேகம்-கியர் இடையிலான சமநிலை இல்லையென்றால் எரிபொருள் செலவு கூடும். போக்குவரத்து நெரிசல், சாலையின் தன்மையைப் பொறுத்து எப்போதும் குறிப்பிட்ட ஒரு வேகத்தில் மட்டும் வண்டியை ஓட்ட முயற்சியுங்கள்.

இந்தியச் சாலைகளில் 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை ஓட்டுவதன் மூலம் 40 சதவீதம் எரிபொருள் சேமிக்கப்படும் என்கின்றன ஆய்வுகள். புறநகர் பகுதிகள், நெடுஞ்சாலைகள் போன்ற வாகன நடமாட்டம் அதிகமில்லாத பகுதிகளில் அதிகபட்ச கியரில் ஓட்டலாம். மேடும் பள்ளமுமான சாலைகளுக்கு பதிலாக சமமான சாலையிலேயே ஓட்ட முயற்சிக்கவும். போக்குவரத்து சிக்னலில் வாகனத்தை அணைத்துவிட்டு, நமக்குச் சிக்னல் கிடைப்பதற்கு 3 விநாடிகள் முன்னதாக வாகனத்தை ஸ்டார்ட் செய்தால்போதும்.

குறைந்தபட்சமாக 14 விநாடிகள் வாகனம் அணைக்கப்பட்டிருந்தால்கூட எரிபொருள் சேமிக்கப்படும். அணைத்துவைப்பதன் மூலம் சராசரியாக 20 சதவீத எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

ஸ்பீடா மீட்டரில் சிவப்புக்கு முன்னதாகக் குறிக்கப்பட்டுள்ள மிதமான வேகத்தில் செல்வதே நல்லது. அதிக வேகத்தில் செல்வது எரிபொருள் செலவை அதிகரிப்பதுடன், வண்டியின் பாகங்களை விரைவில் பழுதாக்கிவிடும். பெட்ரோல்-டீசல் டாங்கில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக எரிபொருளை நிரப்பாதீர்கள். பெட்ரோல்-டீசல் நிரப்பப்பட்ட பிறகு, அதன்மூடி சரியாக மூடி இருக்கிறதா என்று பாருங்கள். சரியாக மூடவில்லை என்றால், எரிபொருள் ஆவியாக நேரிடும்.

கார்களில் குளிரூட்டும் எந்திரத்தைப் பயன்படுத்துவது எரிபொருள் செலவைப் பெருமளவு அதிகரிக்கும். குளிரூட்டும் எந்திரத்தைத் தவிர்க்கலாம், கூடியவரை அணைத்து வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் குறைந்தபட்சம் 10 சதவீத எரிபொருளை சேமிக்கலாம். பெட்ரோல், டீசலுக்கு பதிலாக எரிவாயு மூலம் வாகனத்தை மாற்றி இயக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம். தனியாகக் காரில் செல்வதை தவிருங்கள்.

அலுவலகம், பள்ளி போன்ற இடங்களுக்கு வீட்டுக்கு அருகில் இருப்பவர்களுடன் வாகனத்தைப் பகிர்ந்துகொள்வது போக்குவரத்து நெரிசலையும் எரிபொருள் செலவையும் குறைக்கும். எப்போதும் வாகனத்தை நிழல் பகுதியில் நிறுத்துங்கள். வெயில் நேரடியாகப்படும் இடத்தில் நிறுத்துவது எரிபொருளை அதிகம் ஆவியாக்கலாம்.

Next Story