24 மாதங்களில் இல்லாத பின்னடைவு துணிகர-தனியார் பங்கு முதலீடு ரூ.11,900 கோடியாக குறைந்தது


24 மாதங்களில் இல்லாத பின்னடைவு துணிகர-தனியார் பங்கு முதலீடு ரூ.11,900 கோடியாக குறைந்தது
x
தினத்தந்தி 18 March 2020 9:55 AM GMT (Updated: 18 March 2020 9:55 AM GMT)

தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன.

மும்பை

கடந்த பிப்ரவரி மாதத்தில், துணிகர-தனியார் பங்கு முதலீடு 24 மாதங்களில் இல்லாத பின்னடைவாக சுமார் ரூ.11,900 கோடியாக குறைந்து இருக்கிறது.

ஆலோசனை சேவை

தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன. மேலும் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகளையும் வழங்குகின்றன. இந்த நிறுவனங்களின் முதலீட்டை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை எதிர்காலத்தில் அமோக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது.

தனியார் பங்கு முதலீட்டின் ஒரு பிரிவாக துணிகர முதலீடு இருக்கிறது. துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டை ஈர்க்கும் நிறுவனங்கள் ஓரளவு வளர்ச்சி கண்ட பின் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. அப்போது அந்த நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருக்கும் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் தமது பங்குகளை விற்று விட்டு கணிசமான லாபத்துடன் முழுமையாகவோ, பகுதி அளவோ வெளியேறுகின்றன.

2019 காலண்டர் ஆண்டில் 4,800 கோடி டாலர் (சுமார் ரூ.3.40 லட்சம் கோடி) துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 28 சதவீதம் உயர்வாகும். மேலும், நிறைவேறிய ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

170 கோடி டாலர்

நடப்பு 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 170 கோடி டாலர் (சுமார் ரூ.11,900 கோடி) அளவிற்கு துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடு வந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 280 கோடி டாலராக (ரூ.19,600 கோடி) இருந்தது. ஆக, முதலீடு 39 சதவீதம் குறைந்து இருக்கிறது. முந்தைய மாதத்தில் அது 250 கோடி டாலராக இருந்தது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story