வானவில் : மன உணர்வுகளை வெளிப்படுத்தும் பேண்ட்


வானவில் : மன உணர்வுகளை வெளிப்படுத்தும் பேண்ட்
x
தினத்தந்தி 18 March 2020 10:30 AM GMT (Updated: 18 March 2020 10:30 AM GMT)

செயற்கை நுண்ணறிவு நுட்பமானது மனித மூளைக்கு நிகராக செயலாற்றக் கூடியது. இப்போது அடுத்த கட்டமாக மனிதனின் மன உணர்வுகளின் அடிப்படையில் செயல்படும் கருவிகளை உருவாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹப்பீ இன்கார்ப்பரேஷன் நிறுவனம் உலகிலேயே முதல் முறையாக மனிதனின் உணர்வுகளை மதிப்பிடும் கருவியை உருவாக்கியுள்ளது. நெக் பேண்ட் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவியானது மின்காந்த அலைகளை செலுத்தி மனிதனின் உணர்வுகளை அறிந்து அது குறித்த தகவலை ஸ்மார்ட்போனுக்கு அனுப்புகிறது. இதிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகள் 22 கிலோ ஹெர்ட்ஸ் திறன் கொண்டவை.

இது உடலுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட பிறகே இது சந்தையில் அறிகப்படுத்தப்பட்டது. மனிதனின் மன உணர்வுகளை ஸ்மார்ட்போன் மூலமாக தெரிந்துகொள்ளும்போது தங்களது நிலை உணர்ந்து தங்களது செயல்பாடு மேம்பட்டதாக இதை உபயோகித்த பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மனிதனுக்கு ஓய்வு தேவை என்பதையும் இது உரிய நேரத்தில் அறிவுறுத்துகிறது. இதனால் ஓய்வு கிடைத்து தங்களின் செயல்பாடு மேம்பட்டதாக பலரும் தெரிவித்துள்ளனர். இந்த பட்டையானது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனித்தனியான செயல்பாடுகளைக் கொண்டது. இதில் காக்னிடிவ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட இது பெரிதும் உதவுகிறது. இதன் செயல்பாட்டுக்கென பிரத்யேக செயலியையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. மனித வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கு உதவும் இந்தக் கருவி விரைவிலேயே இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Next Story