தினம் ஒரு தகவல் : ‘கொரோனா’வும், பெயர் காரணமும்....!


தினம் ஒரு தகவல் : ‘கொரோனா’வும், பெயர் காரணமும்....!
x
தினத்தந்தி 24 March 2020 6:29 AM GMT (Updated: 24 March 2020 6:29 AM GMT)

‘கொரோனா’ என்பது தற்சமயம் உலகில் வருத்தத்துடனும், பயத்துடனும் உச்சரிக்கப்படும் சொல். கோவிட்-19 என உலக சுகாதார நிறுவனம் அதற்கு பெயரும் வைத்தாகிவிட்டது.

‘ஸ்பானிஷ் ப்ளூ’ என்பது போன்று ஊர் பெயரிலோ, ‘ஸ்வைன் ப்ளூ’ என்பது போன்று விலங்கு பெயரிலோ, இனி இந்த வைரசை அழைக்க முடியாது. பழைய பெயர்கள் தேவையின்றி ஊரையும், விலங்கையும் பழித்து, தேவையற்ற சமூக விலக்கலை ஏற்படுத்துகின்றன. வைரசுக்குக்கூட ஏதாவது ஒரு தேவையற்ற அடையாளம் கூடாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இல்லையென்றால் இது சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டதன் அடையாளமாக ‘சைனீஸ் ப்ளூ’ என்று பெயர் வைத்திருப்பார்கள். இப்படியான அடையாளங்கள் தேவையற்ற பிரிவினையையும், விலக்கலையும் சர்வதேச சமூகத்தில் உண்டாக்கிவிடும் என்பதாலே இப்படி பொதுவான பெயரை வைத்து விட்டார்கள். ‘கோவிட்-19’ என்பது, கொரோனா, வைரஸ், டிசீஸ் என்பதையும், 19 என்பது இந்த வைரஸ் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும் குறிக்கிறது.

கிட்டத்தட்ட 5 மாதமாக இந்த வைரசால் உலகம் மிரண்டு போய் நிற்கிறது. இனி இப்படியான சிக்கல்களை அடிக்கடி எதிர்கொள்ளத்தான் வேண்டி இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துக்கொண்டே வந்திருக்கிறது. உறங்கி கொண்டிருந்த பாக்டீரியா, வைரஸ் பலவும் உசுப்பேறி உலாவரும் காலம் இது. உலகை சூடாக்கியதாலும், பனிமலைகளை உருக்கி தள்ளியதாலும் இந்த நுண்ணுயிரிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனமும் சூழலியல் அறிவியலாளர்களும் எச்சரித்து வருகின்றனர்.

சுற்றுச்சூழலுக்கு அடுத்து உணவுப் பொருட்களில் சேர்க்கும் வேதிப்பொருட்கள். நம் ஒவ்வொருவர் குடலிலும் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் குடியிருக்கின்றன. அவை ஜீரணத்துக்காக மட்டுமே என்று மருத்துவ உலகம் எண்ணிக்கொண்டிருந்தது. இப்போது அவை ஜீரணத்துக்கானது மட்டுமல்ல, பல பணிகளுக்கு அந்த நுண்ணுயிரிகளின் தேவை மிக அவசியம் என்ற புரிதல் அதிகரித்து வருகிறது. கட் பயோமி என பெயரிட்டு நுட்பமாகப் பார்க்கத் தொடங்கிவிட்ட அவற்றை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

நம்மைவிட அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் பலம் பொருந்திய சீனாவே கொரோனா வைரசால் திணறுவைதைப் பார்க்கையில், இந்தியா இப்படிப்பட்ட சவாலை எப்படி எதிர்கொள்ளும் என யோசிக்கையில், சற்று அச்சமாகவே உள்ளது. இங்கே உள்ள வெப்பம் நமக்குப் பெரும் பாதுகாப்பு என்கிற வாதம் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது. இதை தர்க்கத்துக்கு வைத்துக்கொள்ளலாமே ஒழிய, எல்லா நிலையிலும் அதுவே உண்மையாகி விடாது.

சீனத்தில் புது வைரஸ் என்றால், இங்கே உள்ள தட்பவெப்பத்துக்கு ஏற்றாற்போல் வேறு ஒரு புது பாக்டீரியாவோ, பூஞ்சையோ, வைரசோ பலம் பொருந்தியதாக மாற சாத்தியமில்லாமல் இல்லை. அதை கணக்கில் கொண்டு அரசும், மக்களும் செயல்பட வேண்டும்.

Next Story