ஊரடங்கால் பறிபோன உற்சாகம்: மயான அமைதி நிலவும் விளையாட்டு மைதானங்கள் -கிரிக்கெட் விளையாடுவது எப்போது?, இளைஞர் பட்டாளம் ஏக்கம்


ஊரடங்கால் பறிபோன உற்சாகம்: மயான அமைதி நிலவும் விளையாட்டு மைதானங்கள் -கிரிக்கெட் விளையாடுவது எப்போது?, இளைஞர் பட்டாளம் ஏக்கம்
x
தினத்தந்தி 16 May 2020 2:52 PM GMT (Updated: 16 May 2020 2:52 PM GMT)

ஊரடங்கு காரணமாக உற்சாகம் தழுவும் இடங்களாக இருந்த விளையாட்டு மைதானங்களில் இப்போது மயான அமைதியே நிலவுகிறது. இதனால் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது? என இளைஞர் பட்டாளம் ஏக்கத்தில் இருக்கிறார்கள்.


சென்னை, 

ஊரடங்கு காரணமாக உற்சாகம் தழுவும் இடங்களாக இருந்த விளையாட்டு மைதானங்களில் இப்போது மயான அமைதியே நிலவுகிறது. இதனால் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது? என இளைஞர் பட்டாளம் ஏக்கத்தில் இருக்கிறார்கள்.

விளையாட்டு மைதானங்களின் பரிதாபம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 3-ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வர இருக்கும் நிலையில், 4-ம் கட்ட ஊரடங்கு தொடங்கப்பட இருக்கிறது. ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி கிடக்கிறது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் உயிர்ப்பெறாத எத்தனையோ விஷயங்களில் ஒன்றுதான், உற்சாகம்.

கொரோனா பீதி காரணமாக உற்சாகம் கரைபுரண்டு ஓடும் விளையாட்டு மைதானங்கள் இன்றைக்கு பரிதாபமான நிலையில் காட்சி அளிக்கின்றன. இதனால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் காணப்பட்ட விளையாட்டு மைதானங்கள் இன்றைக்கு மயான அமைதி தவழும் இடமாக மாறிக்கிடக்கின்றன.

மவுனத்தின் இருப்பிடமாக...

விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் போதும் ஒரு மைதானத்தில் பல கிரிக்கெட் ஸ்டம்புகள் ஊன்றியிருப்பதையும், பந்துகள் நாலாப்புறமும் சிதறடிக்கப்படுவதையும் பார்க்கலாம்.

பள்ளி நாட்களிலும் கூட விளையாட்டு மைதானங்களை மிதிக்காமல் குழந்தைகளின் கால்கள் வீடு திரும்பாது. அந்தளவு வாழ்க்கையோடு பின்னி பிணைந்த விளையாட்டு திடல்கள் இன்றைக்கு மவுனத்தின் இருப்பிடமாக மாறிவிட்டது. ‘இப்படி விளையாடி உயிரை வாங்குறாங்களே’, என்று சலித்து பேசிய அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களே இன்றைக்கு, ‘என்னப்பா பழைய மாதிரி கலகலப்பே இல்லையே’ என்று எண்ணும் அளவுக்கு மைதானங்களின் நிலைமை மாறியிருக்கிறது.

இளைஞர்களின் ஏக்கம்

இதனால் விளையாட்டு மைதானங்களை பரிதாபமாக பார்க்கும் இளைஞர் பட்டாளம் மீண்டும் எப்போது ஆசைதீர கிரிக்கெட் விளையாடலாம்? ஓடியாடி மகிழலாம்? என்று ஏக்க பெருமூச்சு விட்டு வருகிறார்கள். மைதானங்களில் விளையாட முடியாத ஏக்கத்தை தெருக்களிலும், வீட்டின் வளாகங்களிலும் விளையாடி தீர்த்து கொள்கிறார்கள். சிலர் பேட்டை மட்டும் எடுத்துக்கொண்டு சுவரில் பந்தை எறிந்து தன்னந்தனியே விளையாடும் காட்சியையும் பார்க்க முடிகிறது.

ஊரடங்கு ஓயுமோ... இல்லையோ.... விளையாட்டு மைதானங்களில் நிலவும் அமைதி ஓயவேண்டும் என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story