சீனாவுக்கு எதிராக, இந்தியாவுடன் ஜப்பான் ரகசிய பாதுகாப்பு கூட்டணி


சீனாவுக்கு எதிராக, இந்தியாவுடன் ஜப்பான் ரகசிய பாதுகாப்பு கூட்டணி
x
தினத்தந்தி 4 July 2020 8:33 AM GMT (Updated: 4 July 2020 8:33 AM GMT)

சீனாவுக்கு எதிராக, இந்தியாவுடன் ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஜப்பான் தயாராகியுள்ளது.

புதுடெல்லி

சீனா உலக நாடுகளுக்கு கொடுக்கும் பிரச்சினைகளை சமாளிக்க அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சுவீடன், நார்வே ஆகிய நாடுகள் இதில் ஒன்று சேர்ந்து உள்ளன.

சீனாவிற்கு எதிராக இந்த 8 நாடுகளின் அரசியல்வாதிகள் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள்.அதன்படி முதலாவதாக உலக நாடுகளின் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவது. சீனாவின் நிறுவனங்கள் பிற நாட்டு நிறுவனங்களை வாங்குவது, மோனோபோலி என்று சீனாவின் நிறுவனங்கள் தனித்து இயக்குவது ஆகியவற்றை எதிர்க்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

சீனா எல்லை விவகாரத்தில் இந்தியாவுடன் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. சீனா தென் சீன கடல் எல்லை, தைவான் ஆகிய நாடுகள் மீது அத்துமீறி வருகிறது. இதை மொத்தமாக தடுக்க வேண்டும். சீனாவின் ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஹாங்காங் பிரச்சினையில் சீனாவின் செயலை தடுக்க வேண்டும். ஹாங்காங்கை சீனா மொத்தமாக கட்டுப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.சீனா இதை உள்நாட்டு விவகாரம் என்று கூறி வருகிறது. ஆனால் சீனா ஹாங்காங்கிற்கு கொடுத்த வாக்கை மீறி விட்டது.

இதனால் ஹாங்காங்கில் அமைதியை கொண்டு வரும் வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சீனா மற்ற நாடுகளுடன் நட்பாக இருப்பதை தடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனா தற்போது ரஷ்யா, தென் கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நட்பாக இருக்கிறது.

சீனாவின் இந்த உறவுகளை கொஞ்சம் கொஞ்சமாக துண்டிக்க வேண்டும். உலக அளவில் சீனாவை தனித்து விட வேண்டும் என்று இந்த 8 நாட்டு தலைவர்கள்முடிவு செய்துள்ளதாகவும், இந்த குழுவில் ஜப்பான், பிரித்தானியா ஆகிய நாடுகள் இருப்பது சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்தியா-சீனா இடையேயான கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது. எல்லையில் ஏற்கெனவே கடை பிடிக்கப்பட்டு வரும் நிலையை தனிச்சையாக மாற்றும் முயற்சியை எதிர்ப்பதாக ஜப்பான் கூறியுள்ளது.

தற்போது சீனாவுக்கு எதிராக, இந்தியாவுடன் ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஜப்பான் தயாராகியுள்ளது. 
பாதுகாப்பு உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள, ஜப்பான் தனது சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்துள்ளது. இந்தத் திருத்தத்துடன், ஜப்பான், அமெரிக்காவைத் தவிர, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துடனும் தன் பாதுகாப்பு உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்கிறது.

ரகசிய சட்ட அமலாக்கத்தின் மூலம், ஜப்பான், இந்த ஏற்பாட்டை கடந்த மாதம் செய்தது. இதற்கு முன்பு அமெரிக்காவுடன் மட்டும்தான் ஜப்பான் பாதுகாப்புத் தகவல்களை பகிர்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நாட்டு ராணுவத்திடமிருந்து கிடைக்கும் தகவல்களை சேகரித்து பயன்படுத்துவதன் மூலம், ஒன்றிணைந்த பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் மேம்பாட்டில் உதவி கிடைக்கும். மேலும், சீன படைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை சேகரிப்பதிலும் இதன் மூலம் உதவி கிடைக்கும். 

ஜப்பானின் இந்த நடவடிக்கை அதற்கும் லாபகரமானதாக இருக்கும். ஏனென்றால், தென் சீனக் கடலில் சீனா தொடர்ந்து ஜப்பானை அச்சுறுத்தியும் சீண்டியும் வருகிறது. சீன நடமாட்டத்தை கண்காணிப்பது ஜப்பானுக்கும் கடினமாகி விட்டது.

சீனாவினால் அதிகரிக்கும் ஆபத்துகளை கருத்தில்கொண்டு, ஜப்பான் கடந்த ஆண்டுகளில் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் மற்றும் சட்டங்களில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு முதன் முறையாக ஜப்பானின் தற்காப்புப் படைகளும் ஆஸ்திரேலிய ராணுவமும், போர் விமானங்களுடன்  கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன. 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும், ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படை, மலபாரில், இந்திய-அமெரிக்க படைகளுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சீனா, தென்சீனக்கடலில் தன் ஆதிக்கத்தை அதிகரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜப்பானின் ஆட்சியின் கீழ் உள்ள சேங்காகு தீவுகளின் அருகில், சீன கப்பல்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 
தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ரகசிய ஒப்பந்தம் மூலம், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளிடமிருந்து ஜப்பானிற்கு உதவி கிடைப்பதோடு, பாதுகாப்பு தொடர்பான உளவுத் தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்படும்.

Next Story