இரவில் தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்கள் ஆஸ்துமா- ஒவ்வாமை நோயால் அதிகம் பாதிக்கப்படுவர்


இரவில் தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்கள் ஆஸ்துமா- ஒவ்வாமை நோயால் அதிகம் பாதிக்கப்படுவர்
x
தினத்தந்தி 6 July 2020 8:08 AM GMT (Updated: 6 July 2020 8:08 AM GMT)

இரவில் தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

புதுடெல்லி

தூக்கம் இளைஞர்களின் சுவாச ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்ற ஆராய்ச்சியை கனடாவின் அல்பெர்டா பல்கலைக்கழகத்தில் நுரையீரல் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த டாக்டர் சுபப்ரதா மொய்த்ரா தலைமையிலான ஆய்வுக் குழு மேற்கொண்டது.

இதன் ஆய்வு முடிவுகள்  அறிவியல் இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டு உள்ளது அதில் உடலின் உள் கடிகாரத்துடன் ஆஸ்துமா அறிகுறிகள் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தூக்க விருப்பத்தேர்வுகள் இளம் தலைமுறையினருக்கு ஆஸ்துமா அபாயத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பது தொடர்பான முதல் ஆய்வு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வு இளைஞர்கள் இரவில் உரிய நேரத்தில் தூங்குவதன் முக்கியத்துவத்தை வலுப்படுத்துகிறது என்றும், இது பல புதிய விஷயங்களுக்கு அடிப்படை ஆய்வாக இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வில், இந்தியாவின்மேற்கு வங்க மாநிலத்தில் 13 அல்லது 14 வயதுடைய 1,684 இளம் பருவத்தினர், ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை தொடர்பான ஆய்வில் பங்கேற்றனர். ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் மூச்சுத்திணறல், ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை நாசியழற்சி அறிகுறிகள், மூக்கு ஒழுகுதல் மற்றும் தும்முவது பற்றி கேட்கப்பட்டது.

மாலை அல்லது இரவின் எந்த நேரம் அவர்கள் சோர்வாக இருக்கிறார்கள், அவர்கள் எப்போது எழுந்திருப்பார்கள், காலையில் அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 

இவர்களின் அறிகுறிகளை அவர்களின் தூக்க விருப்பங்களுடன் ஒப்பிட்டு, ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைகளை பாதிக்கும் என்று அறியப்படும் பிற காரணிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். 

இரவு தாமதமாக தூங்கச் செல்லும் இளம் வயதினருக்கு, இரவு நேரத்தில் சரியான நேரத்தில் படுக்கைக்கு செல்பவர்களுடன் ஒப்பிடுகையில் ஆஸ்துமா இருப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது. அதுமட்டுமல்ல, தாமதமாக தூங்குபவர்களுக்கு, ஒவ்வாமை மற்றும் நாசியழற்சி பாதிக்கப்படுவதற்கான ஆபத்து இரு மடங்கு அதிகமாக இருப்பதையும் இந்த ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. 

ஆய்வு குறித்து டாக்டர் சுபப்ரதா மொய்த்ரா  கூறியதாவது:- 

"உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை நோய்கள் பொதுவானவை, இந்த நோய்கள் மேலும் அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்புக்கு, மாசுபாடு மற்றும் சிகரெட் புகை உட்பட சில காரணங்களைச் சொல்லலாம். ஆனால் நாம் இன்னும் பலவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்

தூக்கம் மற்றும் தூக்கத்திற்கான ஹார்மோன் மெலடோனின் ஆஸ்துமாவை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது, எனவே இளைஞர்கள் தாமதமாகத் தூங்குவது மற்றும் சீக்கிரமாக படுக்கைக்குச் செல்வது குறித்து ஆய்வு செய்ய விடும்பினோம் என கூறினார்

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மொபைல் போன், டேப்லெட்டுகள் மற்றும் பிற சாதனங்களிலிருந்து சற்று முன்னதாகவே விலகி வந்து, தூக்கத்தை அரவணைத்துக் கொண்டால் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை அபாயத்தை குறைக்க உதவும். இது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்று” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

Next Story