மனிதர்களின் உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்க செய்வது எப்படி?


மனிதர்களின் உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்க செய்வது எப்படி?
x
தினத்தந்தி 1 Aug 2020 7:42 PM GMT (Updated: 1 Aug 2020 7:42 PM GMT)

மனிதர்களின் உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் எப்படி? செயல் இழக்க செய்கிறது என இந்த கட்டுரை விளக்குகிறது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஒரு இடத்தை தொட்டால், அந்த இடத்தை மற்றொருவர் தொடும் போது அவருக்கு நோய்க்கிருமி பரவுகிறது. அப்படி உடலின் வெளிப்புறத்தில் பரவிய கொரோனா வைரஸ் கண், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றின் மூலம் தொண்டை குழாய் வழியாக உடலுக்குள் செல்கிறது.

அந்த வைரஸ் மூக்கும், வாயும் சேரும் இடத்தில் சில நாட்கள் தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் அறிகுறிதான் தொண்டை வலி. தொண்டை வலி வந்தவுடன் உரிய சிகிச்சை மூலம் வைரசை அழிக்க வேண்டும். அப்படி அழிக்கவில்லை என்றால் அது மூச்சுக்குழாய் வழியாக உடலுக்குள் சென்று விடும்.

உடலுக்குள் சென்ற வைரஸ் எப்படி நம் உடலில் உள்ள ஒவ்வொரு நோய் எதிர்ப்பு உயிர் அணுக்களையும் (செல்) பல கோணங்களில் தாக்கி அழித்து முக்கிய உடல் உறுப்புகளை எப்படி செயல் இழக்கச் செய்து கொல்கிறது என்பது பற்றி ‘பிராண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்’ என்ற அறிவியல் இதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த இதழில் கூறியிருப்பதாவது:-

மனிதர்களுக்கு நோய் ஏற்பட்டால் அதை எதிர்த்து போரிடுவதற்கு நம் உடலில் ஏராளமான நோய் எதிர்ப்பு உயிர் அணுக்கள் உள்ளன. ஆனால் அந்த உயிர் அணுக்களை கொரோனா வைரஸ் புதுமையான முறையில் அழிக்கிறது. அதற்கு ‘சைட்டோகைன் புயல்’ என்று பெயர்.

நம் உடலில் நன்மை விளைவிக்கும் ஒரு உயிர் அணுவை மற்றொரு நல்ல உயிர் அணு அழிப்பதுதான் சைட்டோகைன் புயல் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

உடலில் நோய்களை எதிர்த்து போராடும் அதிகப்படியான ‘லிம்போ சைட்ஸ்’ மற்றும் ‘நியூட்ரோபைல்ஸ்’ என்று அழைக்கப்படும் ரத்த வெள்ளை அணுக்களை ஒன்றோடொன்று தாக்கிக் கொள்ள கொரோனா வைரஸ் தூண்டுகிறது. இதனால் அவை அழிந்து போய் விடுகின்றன. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரத்த வெள்ளை அணுக்கள் இறந்த பின்னர் கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் எளிதாக ஊடுருவி சேதத்தை ஏற்படுத்துகிறது.

அடுத்து சைட்டோகைன் புயல் என்ற நிகழ்வு உடலில் அதிகப்படியான காய்ச்சலை உருவாக்கி ரத்த அணுக்களில் கசிவை ஏற்படுத்தி ரத்தத்தை உறையச் செய்கிறது. இதுதவிர குறைந்த ரத்த அழுத்தத்தை உண்டாக்கி ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி, ரத்தத்தில் அமிலத்தன்மையை உருவாக்குகிறது. இதனால் நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

மேலும் கொரோனா வைரஸ் ரத்த வெள்ளை அணுக்களை தவறாக வழிநடத்தி ஆரோக்கியமான திசுக்களை தாக்கி வீக்கத்தை உருவாக்குகிறது. இதனால் நுரையீரல், இதயம், குடல், கல்லீரல், சிறுநீரகம், பிறப்பு உறுப்புகள் செயல் இழந்து விடுகின்றன. இப்படி பல உடல் உறுப்புகளை செயல் இழக்கச் செய்து நுரையீரலின் செயலை கொரோனா வைரஸ் முடக்கி விடுகிறது. இதனால் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது என்றால் கொரோனா வைரஸ் கொன்ற உயிர் அணுக்கள், புரதங்களின் கழிவுகள் ஆகியவை நுரையீரலில் தேங்கி விடுவதால் ஆக்சிஜனை உள்ளிழுக்கும் திறனை நுரையீரல் இழந்து விடுகிறது. எனவே தான் கொரோனா பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் பெரும்பாலானவர்கள் மூச்சுச் திணறி இறக்கிறார்கள்.

கொரோனா வைரசை அழிக்க மருந்து இல்லாத காரணத்தினால் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் அதை எதிர்த்து போரிடுவதற்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் உடல் உறுப்புகளை அதி தீவிரமாக கண்காணித்து செயல்பட வைப்பதின் மூலமே இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். இது எப்படி சாத்தியமென்றால், கல்லீரலில் உள்ள ரத்தத்தை செயற்கை முறையில் எப்படி சுத்திகரிக்கிறோமோ அல்லது சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தை சுத்திகரிக்க டயாலிசிஸ் முறையை எப்படி பயன்படுத்துகிறோமோ அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை செயற்கையாக செயல்பட வைத்து இறப்பை தடுக்க முடியும்.

கொரோனா தாக்கத்தினால் நுரையீரல் செயலிழந்து விட்டால், அதற்கு மாற்றாக தொண்டை குழாய் வழியாக செயற்கை சுவாச எந்திரத்தை(வென்டிலேட்டர்) இணைக்காமல் செயற்கை காற்று குழாய் மூலமாக இளஞ்சூடான ஈரப்பதமிக்க ஆக்சிஜனை மூக்கு வழியாக செலுத்தினால் உயிர் பிழைக்க வைக்க முடியும். இதனால்தான், கொரோனா வைரஸ் உடல் உறுப்புகளை தாக்கி செயல் இழக்கும் அளவுக்கு அதை வளர விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காத்துக் கொள்ள வேண்டுமென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். இதன் மூலம் இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் மோசமடைவதை தடுக்கலாம்.  இவ்வாறு அந்த இதழில் கூறப்பட்டு உள்ளது.

Next Story