குப்புறப்படுத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம்-விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


குப்புறப்படுத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம்-விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2020 11:30 PM GMT (Updated: 12 Sep 2020 7:39 PM GMT)

வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளை குப்புறப்படுக்க வைத்தால் உயிரைக்காப்பாற்றி விடலாம், ஆனால் மூட்டு நரம்புகள் பாதிப்புக்குள்ளாகி விடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வாஷிங்டன், 

வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளை குப்புறப்படுக்க வைத்தால் உயிரைக்காப்பாற்றி விடலாம், ஆனால் மூட்டு நரம்புகள் பாதிப்புக்குள்ளாகி விடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் உலகை மிரட்டி வருகிற நிலையில் அது தொடர்பான ஆராய்ச்சிகள் நீளுகின்றன. நோயின் தீவிர தாக்கத்தால் நுரையீரல் பாதிக்கிறது. அதனால் சுவாசம் சிக்கலாகிறபோது, அத்தகைய நோயாளிகளை வென்டிலேட்டர்களில் வைக்கிறார்கள். இப்படி வென்டிலேட்டரில் வைக்கிற நிலையில் நோயாளிகளின் நிலை குறித்து, அமெரிக்காவில் நார்த்வெஸ்டெர்ன் பல்கலைக்கழகத்தின் அங்கமான பெய்ன்பெர்க் மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி நடத்தி இருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் முடிவை ‘பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் அனஸ்தீசியா’வில் வெளியிட ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அவர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்-

* வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை முகம் குப்புறப்படுக்க வைக்கிறபோது, அது அவர்களின் சுவாசத்தை எளிதாக்கும். அவர்களின் உயிரைக் காப்பாற்றி விடலாம். அதே நேரத்தில் அது அவர்களுக்கு நிரந்தர நரம்பு சேதத்தை ஏற்படுத்தி விடும்.

* நரம்பு பாதிப்பானது, ரத்த ஓட்டம் குறைவது மற்றும் வீக்கம் குறைவதின் விளைவாகும்.

* கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மறுவாழ்வு பெறுகிறபோது, மணிக்கட்டு, கணுக்கால் அல்லது தோள்பட்டை போன்ற முக்கியமான மூட்டுகளில் பலவீனம் ஏற்படும். இந்த உடல் பாகங்கள் உடலின் ஒரு பக்கத்தில் முற்றிலும் முடங்கி விடும். இது அதிர்ச்சி தருகிற பிரச்சினையாகத்தான் இருக்கிறது. கொரோனா தவிர்த்து வேறு எந்த நோயாளிகளிடமும் இந்தளவுக்கு நரம்பு பாதிப்பு காணப்படுவதில்லை.

* கொரோனாவின் தீவிர பாதிப்புக்குள்ளான 12 முதல் 15 சதவீதம் பேர், நிரந்தர நரம்பு பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த வகையில் உலகமெங்கும் பல்லாயிரகணக்கானோர் இதை அனுபவிக்கின்றனர்.

* பெரும்பாலும் மணிக்கட்டு பாதிப்பு, கணுக்கால் பாதிப்பு, கை செயல்பாட்டு இழப்பு, தோள்பட்டை முடக்கம் ஏற்படுகிறது.

* நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்கனவே இருக்கிறபோது, அது கொரோனா நோயாளிகளை மீட்டெடுப்பதற்கு இடையூறாக அமைந்து விடுகிறது. இதனால் அவர்களை முழுமையாக மீட்க முடியாது. நடக்கவோ, கணினி அல்லது செல்போனை கைகளால் பயன்படுத்தவதோ கடினமாகி விடும்.

இவ்வாறு அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.


Next Story