கொரோனா தடுப்பூசி போட 30 கோடி பேர் பட்டியல் தயாராகிறது..!


கொரோனா தடுப்பூசி போட 30 கோடி பேர் பட்டியல் தயாராகிறது..!
x
தினத்தந்தி 7 Nov 2020 1:19 AM GMT (Updated: 7 Nov 2020 1:19 AM GMT)

கொரோனா தடுப்பூசி தயாரானவுடன், மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து இலவசமாக வழங்கும். கொரோனா தடுப்பூசி போட, 30 கோடி பேர் பட்டியல் தயாராகிறது.

புதுடெல்லி, 

கொரோனா தடுப்பூசி தயாரானவுடன், மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து இலவசமாக வழங்கும். கொரோனா தடுப்பூசி போட, 30 கோடி பேர் பட்டியல் தயாராகிறது.

கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணிகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நடந்து வருகின்றன. தடுப்பூசி தயாரானவுடன், அதை பொதுமக்களுக்கு போடுவதற்கான செயல்திட்டமும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் வகுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி தயாரானவுடன், மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்யும். மாநிலங்கள், மாவட்டங்கள் மூலமாக பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்யும். மாநிலங்கள் தனியாக கொள்முதல் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


முதலில் முன்னுரிமை அளித்து 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். இந்த 30 கோடி பயனாளிகளை அடையாளம் காணும் பணியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உதவியுடன் மத்திய அரசு தொடங்கி உள்ளது.

இந்த 30 கோடி பேர், 4 பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்படுகிறார்கள். டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் 1 கோடி பேர், மாநகராட்சி பணியாளர்கள், போலீசார், ஆயுதப்படையினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் 2 கோடி பேர், 50 வயதுக்கு மேற்பட்ட 26 கோடி பேர், இதர நோய்களைக் கொண்ட 50 வயதுக்கு குறைவான 1 கோடி பேர் என மொத்தம் 30 கோடி பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பட்டியலை இம்மாதத்துக்குள்் இறுதி செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி, ஆஸ்பத்திரிகள், சுகாதார மையங்களில் போடப்படும். அதுமட்டுமின்றி, பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பஞ்சாயத்து கட்டிடங்கள் மற்றும் மாநில அரசுகள் தேர்வு செய்யும் இதுபோன்ற பிற இடங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும்.

தற்போது செயல்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம் போலவே, மத்திய அரசின் ‘இவின்’ என்ற மின்னணு தளம் மூலம் சிறப்பு கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும். தடுப்பூசி போட வேண்டிய இடம், நாள், நேரம் ஆகிய விவரங்கள் பயனாளிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும். போலிகளை தடுக்க அவர் களின் ஆதார் எண் இணைக் கப்படும். ஆதார் எண் இல்லாவிட்டால், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை எண் இணைக்கப்படும்.  கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு, ஒவ்வொருவருக்கும் ‘க்யூஆர் கோடு’ உருவாக்கப்பட்டு, அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்படும்.

கொரோனா தடுப்பூசிகளை குறைவான வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும். அதற்காக தற்போது உள்ள 28 ஆயிரம் குளிர்பதன கிடங்குகள் பயன்படுத்தப்படும். மேலும், தனியாரிடம் உள்ள குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் தேசிய நிபுணர் குழு ஈடுபட்டுள்ளது.

அடுத்தடுத்து தடுப்பூசி போடப்பட வேண்டியவர்கள் பட்டியல் நீளும் என்பதால், தடுப்பூசி பணி ஓராண்டு காலத்துக்கு நீடிக்கும். தடுப்பூசி போடுவது தொடர்பான அனைத்து பணிகளையும் கவனிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்களை அமைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story