ஜின்பிங், இம்ரான்கான் முன்னிலையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு


ஜின்பிங், இம்ரான்கான் முன்னிலையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 11 Nov 2020 12:40 AM GMT (Updated: 11 Nov 2020 12:57 AM GMT)

இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 8 உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

புதுடெல்லி,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு, நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 8 உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். ரஷிய அதிபர் புதின் தலைமை தாங்கினார். இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லடாக்கில் அத்துமீறும் சீனாவையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் பாகிஸ்தானையும் கண்டிக்கும் வகையில், காணொலி காட்சியில் அந்த தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் பேசியதாவது:-

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளிடையே தகவல் தொடர்பை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா கருதுகிறது. அதற்கு நாம் முயற்சிக்கும்போது, ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்க வேண்டும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. ஆனால், சில உறுப்பினர் நாடுகள் (பாகிஸ்தான்), தேவையின்றி இருதரப்பு பிரச்சினைகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு கொண்டுவர மீண்டும், மீண்டும் முயற்சிக்கின்றன. இது, இந்த அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது.

கொரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதிலும், வினியோகம் செய்வதிலும் இந்தியா ஈடுபடும். இந்த கொரோனா காலத்தில், 150-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது” இவ்வாறு அவர் பேசினார்.

Next Story