பாக். பயங்கரவாதிகள் ஏற்படுத்திய ஆறாத ரணத்தின் 12-ம் ஆண்டு நினைவு தினம்


பாக். பயங்கரவாதிகள் ஏற்படுத்திய ஆறாத ரணத்தின் 12-ம் ஆண்டு நினைவு தினம்
x
தினத்தந்தி 25 Nov 2020 11:54 PM GMT (Updated: 25 Nov 2020 11:54 PM GMT)

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் 12 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள் கடல் மார்க்கமாக ஊடுருவி 3 நாட்கள் நடத்திய மிருகத்தன தாக்குதலால் ஒட்டுமொத்த தேசமே ஸ்தம்பித்து போனது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் 12 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள் கடல் மார்க்கமாக ஊடுருவி 3 நாட்கள் நடத்திய மிருகத்தன தாக்குதலால் ஒட்டுமொத்த தேசமே ஸ்தம்பித்து போனது.

அன்றைய தினம் இந்திய எல்லையில் கால் பதிப்பதற்கு முன்பே அவர்களின் கோரமுகம் வெளிப்பட்டது. லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கொலை உணர்வுடனும், கொடிய ஆயுதங்களுடன் கராச்சியில் இருந்து இந்தியாவை நோக்கிய பயணத்தை தொடங்கினர். 

அவர்கள் வரும் வழியில் மீன்பிடி படகில் இருந்தவர்களை ஈவு, இரக்கமின்றி கொன்றனர். மேலும் அதே படகில் மும்பைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் சுற்றுலா பயணிகள் போல மும்பை கப்பரடே, பத்வார் பார்க் பகுதியில் கரையேறினர். பின்னர் குழுக்களாக பிரிந்து மும்பையின் அடையாளமாக விளங்கும் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், தாஜ் ஓட்டல், லியோபோல்டு கபே, காமா ஆஸ்பத்திரி, நரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களில் கொடூர தாக்குதல் நடத்தினர்.

குருவிகளை போல சுட்டு தள்ளினர்

இதில் பயங்கரவாதிகள் அஜ்மல் கசாப் மற்றும் அபு இஸ்மாயில் மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் நடத்திய தாக்குதல் மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது. அவர்கள் ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த அப்பாவி மக்களை முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த பாரபட்சமும் பார்க்காமல் கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுத்தள்ளி தங்கள் ரத்த வெறியை தீர்த்துக்கொண்டனர். 15 நிமிடங்களில் அவர்கள் 58 பேரை கொன்று குவித்து சென்ற இடங்களையெல்லாம் ரத்த சகதியாக்கினர். இங்கு நடத்திய தாக்குதலில் 104 பேர் படுகாயமடைந்தனர்.

இதேபோல லியோபோல்டு கபேயில் 11 பேரும், டிரிடென்ட் ஓட்டலில் 30 பேரும், தாஜ் ஓட்டலில் 31 பேரும், நரிமன் ஹவுசில் 7 பேரும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 166 பேர் மாண்டனர். மேலும் 320-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இதேபோல அவர்கள் போலீஸ் வாகனத்தை கடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர். மஜ்காவ், வில்லேபார்லேவில் குண்டுகளும் வெடித்தன. இதில் போலீஸ் வாகனத்தை கடத்தி சென்ற பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை மட்டும் போலீசார் உயிருடன் பிடித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஒம்லே தனது உயிரை கொடுத்து அஜ்மல் கசாப்பை உயிரோடு பிடிக்க உதவினார். மற்ற அனைத்து பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டனர். இதேபோல அஜ்மல் கசாப்பும் கடந்த 2012-ம் ஆண்டு புனே எரவாடா ஜெயிலில் தூக்கிலிடப்பட்டான்.

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்திற்கு சமீபத்தில் வேறு வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அது ஏற்படுத்திய காயம் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் ஆறா வடுவாகவே உள்ளது. மும்பை மட்டும் இன்றி உலகில் எங்கும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறக்கூடாது என்பதே அனைத்து தரப்பு மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.


Next Story