பதவி ஏற்ற நாள் முதல் நெருக்கடி, சவால்களை தகர்த்து ஓசையின்றி ஓராண்டை நகர்த்திய உத்தவ் தாக்கரே


பதவி ஏற்ற நாள் முதல் நெருக்கடி, சவால்களை தகர்த்து ஓசையின்றி ஓராண்டை நகர்த்திய உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 28 Nov 2020 2:44 AM GMT (Updated: 28 Nov 2020 2:44 AM GMT)

மராட்டிய சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின் போதே சிவசேனாவை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்ற பால்தாக்கரேவின் கனவை நிறைவேற்றுவேன் என உத்தவ் தாக்கரே அடிக்கடி கூறினார்.

மராட்டிய சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின் போதே சிவசேனாவை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்ற பால்தாக்கரேவின் கனவை நிறைவேற்றுவேன் என உத்தவ் தாக்கரே அடிக்கடி கூறினார்.

இந்தநிலையில் தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா, சிவசேனா இடையே முதல்-மந்திரி பதவியை விட்டுகொடுப்பதில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. இப்படியொரு ஆட்சி அமையும் என பலரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் தான் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பா.ஜனதாவின் அரசியல் சாணக்கியத்தனமும் தோற்று போனது.

எனினும் இந்த கூட்டணி அரசு அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. தேர்தல் முடிவு வெளியான பிறகு 80 நாள் அரசியல் பரபரப்புகள், ஜனாதிபதி ஆட்சி, தேவேந்திர பட்னாவிஸ்- அஜித்பவாரின் 80 மணி நேர ஆட்சியை தாண்டி தான் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்க முடிந்தது.

ஆட்சி பிடிக்கத்தான் போராட்டம் என்றால் பதவி ஏற்ற பிறகும் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இன்றுடன் மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்து ஒரு ஆண்டு ஆகிறது.

ஆரம்பத்தில் கொள்கைகள் முரண்பாடான 3 கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஆட்சி செய்வதே உத்தவ் தாக்கரேக்கு சிக்கலாக இருந்தது. எனினும் அதை சரத்பவார் மூலமாக லாவகமாக கையாள தொடங்கினார். கடந்த ஒரு ஆண்டு நிசர்கா புயல், கொரோனா பிரச்சினை என மாநில அரசுக்கு மிகுந்த கடுமையான காலமாகவே இருந்தது. இதேபோல மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்ட நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களா வீடு இடிக்கப்பட்டது, செய்தி சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது, நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு, கொரோனா ஊரடங்கின் போது கோவில்களை திறப்பதில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி- முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இடையே ஏற்பட்ட மோதல் போன்ற சம்பவங்களால் மாநிலத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

முக்கிய முடிவுகள்

இதுதவிர 40 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.38 ஆயிரம் கோடி பயிர் கடன் தள்ளுபடி, ஆரேகாலனி மெட்ரோ பணிமனையை காஞ்சூர்மாக்கிற்கு மாற்றியது மகா விகாஸ் கூட்டணி ஆட்சியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளாக பார்க்கப்படுகிறது. மேலும் தேவேந்திர பட்னாவிசின் கனவு திட்டமான நாக்பூர்- மும்பை சாலைக்கு பால் தாக்கரே பெயர் சூட்டப்பட்டது, மாநில அரசு சமீபத்தில் சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.

எனினும் கடும் சவால்களுக்கு இடையேயும் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி நாற்காலியை உறுதியாக தக்கவைத்து ஓராண்டை நகர்த்தி கொண்டு வந்துள்ளார் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். மேலும் வீட்டில் இருந்தபடி வேலை செய்கிறார் என்பதை தவிர அவர் மீது பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை எனவும், நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் உத்தவ் தாக்கரேவின் மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரேவை சிக்க வைக்க நினைத்த பா.ஜனதாவின் முயற்சிகள் தோல்வி அடைந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


Next Story