கொரோனா தொற்று காரணமாக கோவா சுற்றுலாத் துறை கடுமையாக பாதிப்பு


கொரோனா தொற்று காரணமாக கோவா சுற்றுலாத் துறை கடுமையாக பாதிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2020 9:35 PM GMT (Updated: 26 Dec 2020 9:35 PM GMT)

சுற்றுலாத் துறையை பிரதானமாக நம்பியுள்ள கோவாவுக்கு கொரோனா தொற்றால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பனாஜி, 

சுற்றுலாத் துறையை பிரதானமாக நம்பியுள்ள கோவாவுக்கு கொரோனா தொற்றால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சுற்றுலாத் தொழிலில் ரூ.7 ஆயிரம் கோடி வரை ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

எல்லா துறைகளையும், எல்லா பகுதிகளையும் போல கோவா மாநிலத்திலும் கொரோனா மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு இப்பெருந்தொற்று 700 உயிர்களைப் பறித்திருக்கிறது.

அதேநேரம், கோவா மாநிலத்தின் பிரதான வருவாய் ஆதாரமாக இருக்கும் சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கான பல சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன, கடலோர குடில்கள் காற்று வாங்குகின்றன, டாக்சி டிரைவர்கள், மோட்டார்சைக்கிளை வாடகைக்கு விடுவோர் என பலரும் பலத்த அடி வாங்கியுள்ளனர். சுற்றுலாத் துறையில் ரூ.1000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோவா தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

தேநேரம், மாநில சுற்றுலாத் துறையும், ஒரு தனியார் நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சுற்றுலாத் தொழிலில் ரூ.2 ஆயிரம் கோடி முதல் ரூ. 7 ஆயிரத்து 200 கோடி வரை ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 35 முதல் 58 சதவீதம் அளவுக்கு வேலை இழப்புகளும் ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் வருடந்தோறும் நடைபெறும் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் விருந்து விழா, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும். ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் அவ்விழா இம்மாதம் எளிமையாக நடந்து முடிந்தது.

கொரோனா தொற்று காரணமாக கோவாவில் பெருமளவில் வேலை இழப்பு ஏற்பட்டிருப்பதாக முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அரசுத் துறைகளில் அடுத்த ஆண்டு 10 ஆயிரம் வேலைகளுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

கோவாவில் கொரோனாவால் பல எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு ஆறுதல் அளிக்கும் வி‌‌ஷயமாக மழைப்பொழிவு அமைந்தது. 1961-ம் ஆண்டுக்கு பிறகு அதிக மழையை கோவா பெற்றிருக்கிறது. அங்கு இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 412 செ.மீ. அளவுக்கு பொழிந்திருக்கிறது. இது வழக்கமான மழை அளவை விட 41 சதவீதம் அதிகமாகும்.


Next Story