தடுப்பூசியை பாதுகாப்பாக பெற வழிமுறைகள் என்ன? நிபுணர்கள் விளக்கம்


தடுப்பூசியை பாதுகாப்பாக பெற வழிமுறைகள் என்ன? நிபுணர்கள் விளக்கம்
x
தினத்தந்தி 3 Jan 2021 1:56 AM GMT (Updated: 3 Jan 2021 1:56 AM GMT)

கொரோனா தடுப்பூசியை பாதுகாப்பான முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை நிபுணர்கள் விளக்கி உள்ளனர்.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் விரைவில் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துகிற பிரமாண்ட பணி தொடங்க இருக்கிறது. அதற்கான திட்டங்களை மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு வகுத்து வருகிறது. சில இடங்களில் தடுப்பூசியின் முதல் டோஸ் பெறுகிறபோது பாதிப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியை பாதுகாப்பாக பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து நிபுணர்கள் ‘ஜர்னல் ஆப் அலர்ஜி அண்ட் கிளினிக்கல் இம்யூனாலஜி’ பத்திரிகையில் கூறி உள்ளனர். அதில், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பொது ஆஸ்பத்திரியின் ஒவ்வாமை நிபுணர்கள் தலைமையிலான குழு, ஒவ்வாமை என்னும் அலர்ஜி பாதிப்பு உடையவர்கள் தடுப்பூசிகளை பாதுகாப்பாக பெறுவதற்கு வழிகாட்டி உள்ளனர்.

ஒவ்வாமை எதிர்வினைகள் பற்றிய தரவுகளை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ. ஆய்வு செய்துள்ளது. கொரோனா வைரஸ் மரபணு பொருளை அடிப்படையாக கொண்ட எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகள், கொரோனாவின் எந்த ஒரு கூறுக்கும், கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளின் வரலாற்றை கொண்ட நபர்களுக்கு மட்டும் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.

கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின்னர் அனைவரும் 15 நிமிடங்கள் கண்காணிக்கப்படவேண்டும், இந்த நேரத்தில் எதிர்விளைவுகளை அடையாளம் கண்டு ஊழியர்கள் நிர்வகிக்க முடியும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறி உள்ளது. மசாசூசெட்ஸ் பொது ஆஸ்பத்திரியின் ஒவ்வாமை மற்றும் மருத்துவ நோய் எதிர்ப்பு பிரிவின் மருத்துவ இயக்குனர் அலீனா பானர்ஜியும், அவரது சகாக்களும் முதல் டோஸ் தடுப்பூசியின்போது எதிர்வினையை கண்ட நபர்களுக்கு, இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துகிறபோது அதை அவர்கள் பாதுகாப்பாக பெறுவதற்கான நடவடிக்கைகளை கோடிட்டு காட்டி உள்ளனர்.

இதுபற்றி அலீனா பானர்ஜி கூறுகையில், “அமெரிக்க ஒழுங்குமுறை அமைப்புகளின் பரிந்துரைகள் அடிப்படையில் எங்களது வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வாமை வரலாறுகளை கொண்ட நபர்களுக்கு தடுப்பூசியின் 2 அளவுகளையும் எவ்வாறு பாதுகாப்பாக செலுத்துவது என்பது குறித்து மருத்துவ சமூகத்துக்கு தெளிவான வழிமுறைகளை வழங்கி உள்ளோம்” என குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் தடுப்பூசிகளை பொறுத்தமட்டில் ஒவ்வாமை எதிர்வினைகள் மிகவும் அரிதானவை. 10 லட்சம் பேரில் 1.3 பேருக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்பு உண்டு என்று நிபுணர்கள் கூறி உள்ளனர்.

Next Story