கன்னிப் பெண்களின் நோன்பு வழிபாடு


கன்னிப் பெண்களின் நோன்பு வழிபாடு
x
தினத்தந்தி 15 Jan 2021 12:16 AM GMT (Updated: 15 Jan 2021 12:16 AM GMT)

பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல்நாள் கொண்டாடப்படுவது போகி. இது இந்திரனைக் குறிப்பதாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. பழைய பொருட்களை எரிப்பதோடு, வேண்டாத கொள்கைகளையும் தீய பழக்க வழக்கங்களையும் ஒழித்து, நல்ல எண்ணங்களை தொடங்கும் நாளாக போகிப்பண்டிகை கருதப்பட்டது.

இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது தைப்பொங்கல். தை முதல் நாள் விவசாயிகள் மட்டுமின்றி ஏனைய தொழில் செய்வோர், செல்வ வளம் கொண்டவர்கள் எனப்பாகுபாடின்றி வீட்டு முற்றத்தில் அடுப்பு வைத்து புதுப்பானையில் புத்தரிசியிட்டு அதனைச் சுற்றி மஞ்சளையும், கரும்பையும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் ஒருமித்த குரலில் ‘பொங்கலோ, பொங்கல்’ என்று மும்முறை கூறி கொண்டாடுவார்கள். இது ஜாதி, மத பேதங்களை கடந்த பொங்கலாகும்.

மூன்றாம் நாள் விவசாயிகளின் உற்ற நண்பர்களாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு கொண்டாடப்படும் விழாவாகும். அன்றைய நாளில் மாடுகளுக்கு சுதந்திரமளிக்கும் பொருட்டு ஆறு, ஏரி, குளம், கிணறு போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுவார்கள். பின்பு வர்ணம் தீட்டியும், அதன் உடம்பில் வண்ணப் பொட்டுகள் இட்டும், கழுத்திலே மஞ்சள்கொத்து, ஜரிகைத்துணி, வேட்டி வைத்து கட்டி, சலங்கை மணிகளை மாட்டி அலங்கரிப்பதோடு, முதல்நாள் போன்றே பானையில் பொங்கலிட்டு மாடுகளின் முன்பு படையல் வைக்கப்படும்.

அதன்பின்பு கிராமப்புறங்களில் பொதுவான மைதானத்துக்கு கொட்டு முழக்கங்களுடன் அழைத்துச் சென்று மாடுகளின் ஆனந்தத்திற்காக கொம்புகளில் சுற்றப்பட்டிருக்கும் கயிறுகளை கழற்றி விட்டு ஆரவார மகிழ்ச்சியில் மாடுகளை ஓடச்செய்வார்கள். இந்த மாட்டுப்பொங்கல்தான் அலங்காநல்லூர், பல்லவராயன்பட்டி போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டுகளாகவும் நடத்தப்படுகிறது.

நான்காம் நாள் காணும் பொங்கல். மணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாத நோன்பிருந்து பொங்கல் வைத்து வழிபடுதல் நிகழ்வு கன்னிப்பொங்கல் எனப்படுகிறது. உற்றார், உறவினர் மட்டுமின்றி ஜாதி, மத, இன பேதமின்றி சமத்துவ நிலையில் ஒருவரை, ஒருவர் கண்டு களிப்பதனை காணும் பொங்கல் என்கிறோம். இப்போது பல்வேறு சமூகத்தினர் ஒன்றுபடும் சமத்துவ பொங்கலும் பிரபலமாகி வருகிறது.

Next Story