செயலிக்கு மாறும் வர்த்தகம்


செயலிக்கு மாறும் வர்த்தகம்
x
தினத்தந்தி 15 Feb 2021 9:46 AM GMT (Updated: 15 Feb 2021 9:46 AM GMT)

விசிட்டிங் கார்டை வைத்து மட்டும் தொழில் தொடங்கி வென்றவர்கள் ஏராளம். ஆனால் இப்போது தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாறாவிட்டால் வாடிக்கையாளர்கள் வெளியேறும் அளவுக்கு மொத்த சந்தையும் அவர்கள் கையில் இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு இணையதளம் ஆரம்பிப்பதையே பெரிய வேலையாக நிறுவனங்கள் கருதின. இப்போது இணைய தளத்தை தாண்டி ஒவ்வொரு நிறுவனமும் நேரடியாக செயலி (ஆப்) மூலம் வாடிக்கையாளர்களுடன் இணையவே விரும்புகிறார்கள். இப்போது இணைய தளமே வேண்டாம், செயலியே போதும் என்று சொல்லும் நிறுவனங்களும் வந்துவிட்டன. தவிர, பெரும்பாலான நிறுவனங்கள் இணையதள விற்பனையை காட்டிலும் செயலி மூலம் விற்பனை செய்யவே விரும்புகின்றன. அதையே பிரதானப்படுத்தி வருகின்றன.

செயலியை பிரதானப்படுத்த என்ன காரணம். வாடிக்கையாளர் சேவை மையத்தை வைத்து, போன் மூலம் வரும் கால்களை கேட்டறிந்து, தொழில் செய்வதைவிட, செயலி மூலம் ஒரே கிளிக்ல் வியாபாரமும் நடக்கும். நிர்வாக செலவுகளையும் அவர்களால் குறைக்க முடியும். அடுத்து கம்ப்யூட்டரை ஆன் செய்து, இணையத்தில் தேடி பொருட்களை வாங்குவதற்குள் வாடிக்கையாளர்களின் மனது மாறிவிடலாம். செயலி என்பது கையில் இருப்பது. எப்போதும் தொடர்பிலேயே இருப்பதால் வாடிக்கையாளர்களை யோசிக்க வைக்காமல் பொருட்களை வாங்க வைக்க முடியும். அடுத்து டேட்டா. செயலி மூலம் வாடிக்கையாளர் வசிக்கும் இடம், மொபைல் எண் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும். இந்த தகவல்களை வைத்து யாருக்கு என்ன தேவை என்பதை தெளிவாக குறிவைத்து வியாபாரத்தை வளர்க்கலாம். இலக்கு தெரியாமல் அம்பு வீசுவதை விட தெரிந்து அடிக்கலாம் என்பது நிறுவனங்களின் கணிப்பு.

தற்போது ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் 70 சதவீத இந்தியர்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் அதிகரிக்கும் சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பில் இல்லை என்றால் வியாபாரம் குறைந்துவிடுமோ என்ற பதற்றம் காரணமாக செயலியை குறி வைத்திருக்கின்றன நிறுவனங்கள். நிறுவனங்கள் மெல்ல, மெல்ல செயலிக்கு மாற ஆரம்பித்தாலும் மக்கள் பயன்படுத்துகிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே? இந்த செயலி, இத்தனை லட்சம் 
டவுன் லோடு என்பது மட்டுமே வெளியே தெரியவரும். ஆனால் டவுன் லோடு செய்யப்படும் அதே வேகத்தில் ‘அன் இன்ஸ்டாலும்’ நடக்கிறது என்பது வெளியே தெரியாது. சுமார் 30 சதவீதம் வரை அன்இன்ஸ்டால் செய்யப்படுகிறது. அதாவது ஒரு செயலியை 100 பேர் டவுன்லோடு செய்திருக்கிறார்கள் என்றால் 30 நபர்கள் வரை அதை அன் இன்ஸ்டால் செய்திருப்பார்கள். தவிர குறிப்பிட்ட சதவீத நபர்கள் மட்டுமே அதனை தொடர்ந்து பயன்படுத்துவார்கள்.

கம்ப்யூட்டர் மானிட்டர் என்பது பெரும்பாலும் ஒரே அளவாக இருக்கிறது. அதனால் வாடிக்கையாளர்கள் எளிதாக பயன்படுத்த முடியும். ஆனால் ஸ்மார்ட்போன்கள் அப்படி அல்ல. வெவ்வேறு வடிவங்களில் இருப்பதால் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது கடினம். முழுவதுமாக செயலி என்பது இப்போதைக்கு சில நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும் செயலியே இல்லாமல் எதிர்கால சந்தையை பிடிப்பது கடினம்.

Next Story