தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல்; போட்டியிடப்போவது யார்?


தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல்; போட்டியிடப்போவது யார்?
x
தினத்தந்தி 26 Feb 2021 11:45 PM GMT (Updated: 26 Feb 2021 11:45 PM GMT)

தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.வசந்த குமார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீண்ட நிலையில், அதற்கு பிந்தைய கோளாறுகளால் மரணம் அடைந்தார்.

புதுடெல்லி, 

தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.வசந்த குமார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீண்ட நிலையில், அதற்கு பிந்தைய கோளாறுகளால் மரணம் அடைந்தார்.

அவரது மறைவால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானது.
அந்த தொகுதிக்கும் தமிழக சட்டசபை தேர்தலுடன் ஏப்ரல் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தொகுதியில வேட்பு மனு தாக்கல் மார்ச் மாதம் 12-ந்தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு மார்ச் 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20-ந்தேதி நடக்கிறது.

வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 22-ந்தேதி கடைசி நாள். ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்தாலும், 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்து மே மாதம் 2-ந்தேதிதான் இங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

போட்டியிடப்போவது யார்?

இந்த தொகுதி காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த வசந்த குமாரின் மகன் விஜய் வசந்தகுமார், தனது தந்தையின் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார். அதே போன்று கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் பா.ஜ.க. தரப்பில் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கன்னியாகுமரியை போலவே கேரள மாநிலம், மலப்புரம் மக்களவை தொகுதியிலும் ஏப்ரல் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் குஞ்ஞாலிக்குட்டி, கடந்த 3-ந்தேதி பதவி விலகினார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்டது நினைவுகூரத்தக்கது. கேரள சட்டசபை தேர்தலில் குஞ்ஞாலிக்குட்டி, களம் இறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story