உணவு.. உடல்.. குளிர்..


உணவு.. உடல்.. குளிர்..
x
தினத்தந்தி 20 April 2021 12:28 PM GMT (Updated: 20 April 2021 12:28 PM GMT)

குளிர்காலத்தில் தண்ணீர் தாகத்தை பெரும்பாலும் உணரமுடியாது. அதனால் பருகும் தண்ணீர் அளவை குறைத்துவிடக்கூடாது.

சிலர் பசிக்கும், தாகத்திற்கும் வித்தியாசம் தெரியாமலும் தடுமாறுவார்கள். போதுமான இடைவெளியில் தண்ணீர் பருகினால் அதிக பசி உணர்வு தோன்றாது. அதனால் தாகம் எடுக்கவில்லை என்றாலும் தண்ணீர் பருகிவிடுவது நல்லது. அது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். காலை உணவுடன் நார்ச்சத்து, புரதம் அடங்கிய உணவு பதார்த்தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய உணவுகள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். அடிக்கடி பசிக்கவும் செய்யாது. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை எரிக்கவும் துணை புரியும்.

குளிர் காலத்தில் டீ, காபிக்கு மாற்றாக கிரீன் டீ பருகலாம். அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அத்துடன் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவும். உடலில் செலவிடப்படாத கலோரிகளையும் வேகமாக எரித்து உடல் எடையை கட்டுக்குள் வைத் திருக்கவும் துணைபுரியும். குளிர் காலத்தில் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் ஒரு டீஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். அது வயிற்றுக்கு இதமளிக்கும். நோயெதிர்ப்பு சக்தியையும் உருவாக்கும். உடல் எடையை குறைப்பதற்கும் 
வழிவகுக்கும்.

குளிர் காலத்தில் நடைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். தினமும் அரை மணி நேரத்திற்கு மேலாக நடப்பது உடல் எடை அதிகரிப்பதை தடுத்துவிடும். நடைப்பயிற்சியை போல் அரை மணி நேரம் நடனமும் ஆடலாம். அது உடல் தசைகளை இலகுவாக்கவும் உதவும். தியானம் செய்வதும் நல்ல பலனை தரும். என்னதான் உடற்பயிற்சியையும், உணவு பழக்கத்தையும் சிறப்பாக கடைப்பிடித்தாலும் போதுமான நேரம் தூங்கி ஓய்வெடுப்பதும் அவசியம். நன்றாக தூங்காவிட்டால் உடல் சோர்ந்துபோய்விடும். குளிர்காலத்தில் அதிக சோம்பல் காணப்படும். அதனால் 
நொறுக்குத்தீனிகளை பலரும் சாப்பிட விரும்புவார்கள். அது உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு, உடல் எடையையும் அதிகரிக்கச் செய்துவிடும்.

Next Story