பள்ளி மாணவி உருவாக்கிய மொட்டை மாடி நூலகம்


பள்ளி மாணவி உருவாக்கிய மொட்டை மாடி நூலகம்
x
தினத்தந்தி 31 May 2021 1:02 PM GMT (Updated: 31 May 2021 1:02 PM GMT)

கேரளாவில் பள்ளி மாணவி உருவாக்கிய மொட்டை மாடி நூலகத்தில் அபராத தொகை வாங்கப்படுவது கிடையாது.

கேரளாவில் உள்ள மட்டஞ்சேரி கோவிலுக்கு அருகே குடும்பத்துடன் வசித்து வருபவர் 13 வயது பள்ளி மாணவி யசோதா ஷெனாய். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் உயர்கல்வி பயின்று வருகிறார். அண்மையில் யசோதா நூலகம் ஒன்றிலிருந்து பெற்ற புத்தகத்தைத் தாமதமாக ஒப்படைத்திருக்கிறார். இதனால் மாணவியிடம் நூலக நிர்வாகம் அபராத தொகை வசூலித்துள்ளது. இதன் காரணமாக மிகுந்த வருத்தம் அடைந்த அவர், தம்மை விட ஏழ்மையில் உள்ள மாணவர்கள் எவ்வாறு நூலக புத்தகத்திற்கான அபராத தொகையை வழங்குவார்கள் என்று எண்ணினார். அதற்கு ஒரே தீர்வு தாமே இலவசமாக நூலகம் ஒன்றைத் திறப்பதென்று முடிவெடுத்தார்.ஆனால் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத தம்மால் நூலகத்தைத் திறக்க முடியுமா என்று அஞ்சிய மாணவி யசோதா, தமது தந்தை உதவிக்கரத்தால் வீட்டின் மொட்டை மாடியில் அறை ஒன்றை எழுப்பி நூலகத்தை அமைத்தார். அதற்கு யசோதா நூலகம் என்று பெயரும் வைத்தார்.

பின்னர் அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும், மாணவியுடைய தந்தையின் நண்பர்கள் பலரும் தாமாக முன்வந்து ஏராளமான புத்தகங்களை வழங்கினர். தற்போது யசோதா நூலகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும், மலையாள இலக்கியத்தின் முக்கிய படைப்புகளும் அலமாரிகளை அலங்கரிக்கின்றன. அதுமட்டுமின்றி வாசிப்பு பிரியர்களின் புகலிடமாகவே அந்த நூலகம் மாறியுள்ளது. மற்ற நூலகங்கள் போன்று உறுப்பினருக்கான தொகை, மாத சந்தா போன்ற நடைமுறைகள் யசோதா நூலகத்தில் கடைப்பிடிப்பது கிடையாது. 

அனைவருக்குமான திறந்த நூலகம் அது. புத்தகம் ஒப்படைப்புக்கான குறிப்பிட்ட தேதி கடந்தாலும் அபராத தொகை வாங்கப்படுவது கிடையாது. மாணவி யசோதா அவரது நூலகத்தில் நூலகராகப் பணி செய்து கொண்டே பள்ளிப் பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கிறார்.தற்போது கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக நூலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. புத்தகங்கள் தேவைப்படுபவர்களுக்கு மாணவியே கிருமி நாசினி தெளித்து வீட்டு வாசலில் வைத்து விநியோகம் செய்து வருகிறார். திரும்ப ஒப்படைக்கப்படும் புத்தகங்கள் தனி அறையில் ஒரு வாரம் வரை வைக்கப்பட்ட பிறகு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே நூலகத்தில் 
வைக்கப்படுகின்றன. பள்ளிப் படிப்பைக் கூட தாண்டாத இவ்வயதில் மாணவி யசோதா ஷெனாயின் இந்த மகத்துவமான சேவையை அப்பகுதியினர் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர்.

Next Story