கொரோனா 2-வது அலையை போல 3-வது அலையும் கடுமையானதாக இருக்கலாம்: எஸ்.பி.ஐ ஆய்வறிக்கை
கொரோனா 2-வது அலையை போல 3-வது அலையும் கடுமையானதாக இருக்கலாம் என்று எஸ்.பி.ஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலையில் அதிகபட்ச கொரோனா எண்ணிக்கை 1 லட்சத்தை கடக்காத நிலையில், 2-வது அலையில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்து அதிரவைத்தது. இதனால், நாடு முழுவதும் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பின.
ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகளும் கடும் இன்னலுக்கு உள்ளாகினர். இந்த நிலைமை தற்போது மாறி மெல்ல மெல்ல கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 2 லட்சத்திற்கும் கீழ் வந்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா 3-வது அலை பாதிப்பு குறித்து இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 3-வது அலை 98 நாட்கள் சராசரியாக நீடித்துள்ளது. 2-வது அலை 108 நாட்கள் நீடித்திருந்தது.
கொரோனா மூன்றாவது அலை 2-வது அலையை போலவே கடுமையானதாக இருக்கக் கூடும். எனினும், நாம் நன்றாக தயாராகி இருந்தால் தீவிர பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்து உயிரிழப்பு எண்ணிக்கை சரியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், இந்திய மக்கள் தொகையில் வெறும் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
கொரோனா 3-வது அலையின் போது, சுகாதார கட்டமைப்புகள் மேம்படுத்துதல் மற்றும் தடுப்பூசி போடுவதை தீவிரம் ஆக்குவது ஆகியவற்றின் மூலம் , கொரோனா தீவிரமாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிகையை 20 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முடியும். அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையும் பெருமளவு குறைக்க முடியும் என்று எஸ்.பி.ஐ ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story