வெயில் மழை குடை உருவானது எதற்கு?


வெயில் மழை குடை உருவானது எதற்கு?
x
தினத்தந்தி 4 Jun 2021 4:54 PM GMT (Updated: 4 Jun 2021 4:54 PM GMT)

பர்மாவில் 24 அடுக்குகளைக் கொண்ட பிரம்மாண்டக் குடை உருவாக்கப் பட்டது.

மழையில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கே இன்று பெரும்பாலும் குடையைப் பயன்படுத்துகிறோம். ஆரம்பக் காலத்தில் வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கே குடை பயன்படுத்தப்பட்டது.

அப்போது இந்தச் சிறு குடையின் பெயர் பராசோல்.

நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் குடை போன்ற ஒரு பொருளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். பனை ஓலையில் குச்சியைச் செருகி உருவாக்கப்பட்ட இந்தக் குடை வெயிலில் இருந்து காப்பாற்றியது. 3,500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டில் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், செல்வந்தர்கள், மதகுருமார்கள் மட்டும் வெயிலுக்குக் குடைப் பிடிக்க ஆரம்பித்தனர். பாலைவன நாடுகள் என்பதால் வெயிலில் இருந்து தப்பிப்பது அவசியமாக இருந்தது. பெரும்பாலும் பெண்கள் பயன்படுத்தினர்.

கி.மு. 11-ம் நூற்றாண்டில் சீனாவில் மழையிலும் பயன்படுத்தக் கூடிய, தண்ணீர்ப் புகாத குடைகள் உருவாக்கப்பட்டன. பட்டுத்துணியால் செய்யப்பட்ட இந்தக் குடைகளையும் மன்னர்களும், செல்வந்தர்களும்தான் பயன்படுத்தினர். இது ஆசிய நாடுகளுக்குப் பரவியது. பர்மாவில் 24 அடுக்குகளைக் கொண்ட பிரம்மாண்டக் குடை உருவாக்கப்பட்டது. குதிரை வண்டிகளில் பெரிய குடைகளை விரித்து, வெயில் படாமல் பயணத்தை மேற்கொண்டார்கள்.

18-ம் நூற்றாண்டில் ஐரோப்பா, வட அமெரிக்கா முழுவதும் குடைகள் பரவின. அப்போதும் பெண்களே குடைகளைப் பயன்படுத்தினர். பிறகு இங்கிலாந்தில் ஆண்களும் குடைகளை ஏற்றுக்கொண்டனர். சாதாரணமானவர்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் குடைகள் விற்பனைக்கு வந்தன.

பெரிய குடைகளைக் கொண்டு செல்வது சிரமமாக இருந்ததால், 1928-ம் ஆண்டு பாக்கெட் குடைகள் அறிமுகமாயின. 1969-ம் ஆண்டு பிராட்போர்ட் இ பிலிப்ஸ் நவீன மடக்குக் குடைகளை அறிமுகம் செய்தார்.

இன்றும்கூட கோவில்கள், தேவாலயங்களில் குடைகள் பயன்படுத்தப்படுகின்றன. கடற்கரைகளில் குடையின் கீழ் அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் குடைகள் இருக்கின்றன. அதிக அளவில் குடைகளை உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா? குடையைக் கண்டுபிடித்த சீனாதான். ஆயிரக்கணக்கான குடை நிறுவனங்கள் இங்கே இருக்கின்றன.

Next Story