உலக மக்கள் தொகை தினம்


உலக மக்கள் தொகை தினம்
x
தினத்தந்தி 28 Jun 2021 12:46 PM GMT (Updated: 28 Jun 2021 12:46 PM GMT)

1989-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ந் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.

1989-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ந் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்து செல்லும் ஒரு முயற்சியாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடுகளிலும் உணவு பற்றாக்குறை, நிலப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, சூழல் பிரச்சினைகள் என பல பிரச்சினைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது மக்கள் தொகை.

உலகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் எடுக்கப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி உலக மக்கள்தொகை 730 கோடியாக உள்ளது. அது போல் இந்திய மக்கள் தொகை 2018-ம் ஆண்டு நிலவரப்படி 134 கோடியே 80 லட்சம். இது உலக மக்கள் தொகையில் (760 கோடி) 17.74 சதவீதம். அண்டை நாடான சீனாவின் மக்கள் தொகை 141 கோடி.

1969-ம் ஆண்டு நமது நாட்டின் மக்கள் தொகை 54 கோடியே 15 லட்சமாக இருந்தது. இதே காலகட்டத்தில் சீனாவின் மக்கள் தொகை 79 கோடியே 60 லட்சம். ஆனால் சீனாவுடன் தற்போது ஒப்பிடுகையில் இந்திய மக்கள் தொகை 2 மடங்கிற்கும் மேலாக பெருகி இருக்கிறது. நாட்டில் ஒரு வினாடி நேரத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 34. 1979-ம் ஆண்டு சீனாவில் ஒரு குழந்தை திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்து விட்டது. அங்கு வினாடிக்கு 11 குழந்தைகள்தான் பிறக்கின்றன.

நிலப்பரப்பில் இந்தியாவை விட சீனா மும்மடங்கு பெரியது (இந்தியாவின் நிலப்பரப்பு 3.287 மில்லியன் சதுர கி.மீ. சீனா 9.597 மில்லியன் சதுர கி.மீ.) என்பதால் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் சூழ்நிலை அங்கு ஏற்பட வாய்ப்பில்லை. நமது நாடோ பரப்பளவில் சிறியது. 2050-ல் இந்திய மக்கள் தொகை சீனாவை மிஞ்சி 160 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் உணவு, குடிநீர், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அப்பொழுது பெரும் தலைவலியை ஏற்படுத்தலாம். குறிப்பாக உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு நிலையை எட்டினாலும் கூட, மக்கள் தொகை பெருக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான இலக்கு அதிகமாகி கொண்டே போகும். உணவு பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுவோம்.

2060-ம் ஆண்டு உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியாக அதிகரித்தால் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மக்கள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் பெரும் அவலத்தை சந்திக்கும் நிலைமை ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. இது இந்தியாவுக்கும் பொருந்தும். எனவே மத்திய, மாநில அரசுகள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்திடவேண்டும்.

மக்கள் தொகை அதிகரிப்பால் மக்களின் அடிப்படை வசதிகளை உறுதிசெய்வதற்கு பல நாடுகள் திண்டாடி வருகின்றன. எனவே, மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, வங்காள தேசம் ஆகிய நாடுகளில் மக்கள் தொகை பெருக்கத்தால் நீடித்த பிரச்சினைகளை எதிர்கொள்வதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உணவு, நீர், சுற்றுச்சூழல் மாசடைதல், சமூக சீர்கேடுகள், சுகாதார பிரச்சினைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை அதிகரிக்கும்போது பொருளாதார நெருக்கடியும் உருவாகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வரிகள் நாம் வாழும் இந்த பூமிக்கும் பொருந்தும்.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகள் உள்பட 18 மொழிகளில் பயிற்சி குறிப்பேடுகள் தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில், மக்கள் தொகை குறித்த விவரங்கள் திரட்டப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியான வீடுகளை பட்டியல் இடுதலில், கட்டிட எண் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வீட்டு எண், அறைகளின் எண்ணிக்கை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, வாகனம் பற்றிய விவரங்கள் உள்பட 35 கேள்விகள் கேட்கப்படும். கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுபடி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 19 லட்சத்து 3 ஆயிரத்து 422 பேர் எனக்கணக்கிடப்பட்டது. இதில், ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சத்து 24 ஆயிரத்து 248 எனவும், பெண்களின் எண்ணிக்கை 58 கோடியே 64 லட்சத்து 69 ஆயிரத்து 174 எனவும் கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story