நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்புக்கு வலு சேர்க்கும் சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படுமா?


நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்புக்கு வலு சேர்க்கும் சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படுமா?
x
தினத்தந்தி 24 July 2021 1:29 AM GMT (Updated: 24 July 2021 1:29 AM GMT)

நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு வலுசேர்க்கும் சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நீண்ட கடற்கரை
மூன்று புறம் கடல் சூழ்ந்த தீபகற்ப நாடான இந்தியா 7 ஆயிரத்து 517 கிலோ மீட்டர் நீள கடற்கரையை கொண்டது. இங்கு 12 பெருந்துறைமுகங்கள், 185 சிறிய துறைமுகங்கள் உள்ளன. இதனால் கடல் வாணிபத்தில் இந்தியா பல நூற்றாண்டுகளாக தழைத்தோங்கி உள்ளது. தமிழகம் சுமார் 1,000 கிலோ மீட்டர் நீள கடற்கரையை கொண்டுள்ளது. நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள 
துறைமுகத்தில் இருந்து, மேற்கு கடற்கரையில் உள்ள துறைமுகத்துக்கு செல்ல வேண்டுமென்றால் இலங்கை நாட்டின் கடல் பகுதியை பயன்படுத்தியே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

424 கடல் மைல்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து சென்னை, எண்ணூர், விசாகப்பட்டினம், பாரதீப், கொல்கத்தா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சுமார் 254 முதல் 424 கடல் மைல் வரை கூடுதலாக சுற்றி செல்வதால் கூடுதலாக 32 மணி நேரத்துக்கு அதிகமாக பயணிக்க வேண்டி உள்ளது.வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றி வரும் பெரிய கப்பல்களும் இலங்கை துறைமுகத்துக்கு சென்று, அங்கிருந்து சிறிய கப்பல்களுக்கு சரக்குகள் மாற்றப்படுகிறது. பின்னரே தூத்துக்குடிக்கு சரக்குகள் கொண்டு வரப்படுகிறது. இதனால் நமது நாட்டுக்கு பெரும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

சேது கால்வாய் திட்டம்
இதனால் 150 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இந்திய கடல் பரப்பில் கப்பல் வழித்தடத்தை அமைக்க விரும்பினர். அதுவே சேதுக்கால்வாய் திட்டம் ஆகும். இந்த திட்டத்தை தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் தமிழன் கால்வாய் என்று அழைத்தார்.மொத்தம் 167 கிலோ மீட்டர் நீளத்துக்கு 12 மீட்டர் ஆழமாகவும், 300 மீட்டர் அகலமாகவும் சேது கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் 78 
கிலோ மீட்டர் நீளத்துக்கு ஏற்கனவே ஆழமான பகுதியாக உள்ளது. எனவே மீதி 89 கிலோ மீட்டர் தூரத்துக்கே கால்வாய் தோண்ட வேண்டி இருந்தது.

பொருளாதாரம்-பாதுகாப்பு
சேது கால்வாய் திட்டமானது நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்காற்றுவதுடன் பாதுகாப்புக்கும் அத்தியாவசியமானது. தற்போது தென்பகுதியில் உள்ள கடற்படை கப்பல்கள், கடலோர காவல்படை கப்பல்கள் வட தமிழகத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் இலங்கையை சுற்றி செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது.சமீபகாலமாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு நிறைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்ட தமிழகத்தில் பல முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை மத்திய அரசு அமைத்தது. இதில் ஆவடி ராணுவ டேங்க் தயாரிப்பு தொழிற்சாலை, கூடங்குளம் அணுமின்நிலையம், தூத்துக்குடி ஜிர்கோனியம் காம்ப்ளக்ஸ், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்டவை அடங்கும். இதனால் மத்திய அரசு தென் தமிழக கடற்கரையை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடற்படை கப்பல்களையும் தூத்துக்குடி கடல் பகுதியில் நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

சீனாவின் ஆதிக்கம்
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தால், இந்திய போர்க்கப்பல்கள் இலங்கை கடல் பகுதி வழியாக செல்லும்போது, குறுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் கப்பல்கள் நம் பாதுகாப்பு இலக்கை அடைவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் நின்று பாதுகாப்பதே சரியாக அமையும். அதனை விடுத்து இலங்கையை சுற்றி வருவது சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த சவாலை எதிர்கொள்ள சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதே தீர்வாக அமையும் என்று கருதி உள்ளனர். 
இதனால் சேது கால்வாய் அமைக்க பல்வேறு கட்டங்களில் குழுக்கள் அமைத்து திட்டம் தீட்டப்பட்டன. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் தி.மு.க. தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அவர்களின் அனைத்து தேர்தல் அறிக்கைகளே அதற்கு சாட்சியாகவும் உள்ளன.

வளர்ச்சி பெறும் துறைமுகங்கள்
சேது கால்வாய் அமைப்பதற்காக சேது சமுத்திர திட்டத்துக்கு கடந்த 2001-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்தது. 2005-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.ரூ.2 ஆயிரத்து 427 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.867 கோடி செலவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பணிகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு விட்டன. இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் ராமேசுவரம், தொண்டி, சேதுபாவாசத்திரம், மசூலிப்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 
மீன்பிடி துறைமுகங்களும், குளச்சல், முட்டம், தூத்துக்குடி, ராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா துறைமுகங்கள் வளர்ச்சி பெறும்.

நிறைவேற்றப்படுமா?
அரபிக்கடலில் இருந்து வங்கக்கடலுக்கு வரும் கப்பல்கள் இலங்கையை சுற்றிக்கொண்டு வருவதால் ஏற்படும் நேரம், எரிபொருள் செலவு மிச்சமாகும். இதனால் கிழக்கு கடற்கரை துறைமுகங்கள் வழியாக பெறப்படும் சரக்குகளின் விலை கணிசமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எளிதில் எதிர்கொள்ள முடியும். ரோந்து பணிகள் அதிகரிப்பதால் கடத்தலை தடுக்க முடியும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். 

அதேபோன்று நம் கடல் பரப்பிலேயே கப்பல்கள் செல்வதால் பாதுகாப்புக்கு வலுசேர்க்கும். எனவே நாட்டின் பொருளாதாரத்துக்கும், பாதுகாப்புக்கும் வலுசேர்க்கும் சேது கால்வாய் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்படுமா? என்று அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story