உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வும், கொரோனா வழிகாட்டுதலும்...! ஆகஸ்டு 1 முதல் 7 வரை


உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வும், கொரோனா வழிகாட்டுதலும்...! ஆகஸ்டு 1 முதல் 7 வரை
x
தினத்தந்தி 31 July 2021 10:28 AM GMT (Updated: 31 July 2021 10:28 AM GMT)

ஆகஸ்டு மாதத்தின் முதல் வாரம் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகிறது. நாளை முதல் ஆரம்பமாக இருக்கும், தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தின் அவசியத்தையும், கொரோனா காலத்தில், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களின் மனதில் எழும் சந்தேகங்களையும் விரிவாக அலசுகிறார், டீனா அபிஷேக். சென்னையை சேர்ந்தவரான இவர், பால் ஊட்டுதல் ஆலோசகராக பணியாற்றுகிறார். அவர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் இதோ...

‘உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம்’ ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் விழிப்புணர்வு போதவில்லையா?

இப்படி ஒரு நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தாய்மை அடைந்தவர்களுக்காகவே நடக்கிறது. ஆனால் பெரும்பாலான தாய்மார்களுக்கு இப்படியொரு நிகழ்வு நடப்பதும், நடைபெற இருப்பதும் தெரிவதில்லை.

இந்த விஷயத்தில் குடும்ப பெரியோர்களின் அனுபவங்களை தாண்டி, பிரத்யேக விழிப்புணர்வு தேவையா?

சில நல்ல விஷயங்களும், சில நம்பக்கூடாத விஷயங்களும் ஆண்டாண்டு காலமாக அறிவுரைகளாக உலா வருகின்றன. அதில் எது உண்மை? எது பொய்? என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியமாகின்றன.

தாய்ப்பால் சுரப்பிற்கு உடம்பில் இருக்கும் சில ஹார்மோன்களே காரணமாகின்றன. எந்தவித மருந்தும், உணவும் இதற்கு தீர்வாகாது. குழந்தை பிறந்த உடனே, அதீத தாய்ப்பால் சுரந்துவிடாது. அடுத்த ஓரிரு நாட்களில்தான், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இயல்பான இந்த விஷயத்தை பல குடும்பங்கள் பூதாகரமாக மாற்றிவிடுகின்றன.

தாய்ப்பால் சுரப்பின்மைக்கு தீர்வு உள்ளதா?

தாய்ப்பால் இல்லாவிட்டாலும், தாய்ப்பால் சுரப்பது போல் எண்ணி குழந்தையை மார்பின் மீது வைத்து பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். இதை ‘கங்காரு கேர்’ என்பார்கள். இந்த உந்துதல் மூலம் பால் சுரக்க ஆரம்பிக்கும். குறைந்தது ஒரு நாளைக்கு 10 முதல் 12 முறையாவது இதை பின்பற்ற வேண்டும். தாயின் ஸ்பரிசத்தில் குழந்தையை தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் இருக்கச் செய்வதன் மூலம், ஹார்மோன்கள் தூண்டப்பட்டு இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பு நிகழும்.

கொரோனா நோயாளிகள் தாய்ப்பால் கொடுக்கலாமா? ஏதாவது பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையா?

தாராளமாக கொடுக்கலாம். தாய்ப்பால் மூலமாக கொரோனா நோய் தொற்று பரவாது என்ற கருத்திற்கு உலக மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கூடவே, நோய் தாக்கத்தில் இருந்து குழந்தையை காக்க, விசேஷ நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் சுரக்கும் வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். அதனால் பாதுகாப்பு நடைமுறைகளுடன், தாய்ப்பால் வழங்கலாம்.

தாய்ப்பால் ஊட்டுதலில், ஏற்பட்டிருக்கும் அறிவியல் முன்னேற்றங்களை விளக்குங்கள்?

இன்றைய நவீன உலகில் பெற்றெடுத்த குழந்தைக்கு மட்டுமல்ல, தத்தெடுத்த குழந்தைக்கு கூட தாய்ப்பால் கொடுக்கும் அளவிற்கு தீர்வுகள் வந்துவிட்டன. ஏன்..? ஆண்களும் பால் கொடுக்கலாம். அதற்கும் அறிவியல் ரீதியான தீர்வுகள் வந்துவிட்டன.

தாய்ப்பால் விழிப்புணர்விற்கு இந்த ஆண்டிற்கான கருத்து என்ன?

‘தாய்ப்பால் ஊட்டுதலை பாதுகாப்பதில், எல்லோருக்கும் சம பங்கு இருக்கிறது’ என்ற கருத்தை முன்னிறுத்தியே, 2021-ம் ஆண்டிற்கான தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது.

அதாவது, தாய்ப்பால் சரிவர சுரக்காத சமயங்களிலும் பெண்களுக்கு ஆதரவாக கணவர், குடும்பத்தினர் இருப்பதில் தொடங்கி, தாய்ப்பால் சுரக்க இதை சாப்பிடு, அதை சாப்பிடு என பொதுவெளியில் பேசி தாய்மார்களுக்கு மன உளைச்சல் உண்டாக்குவதை தவிர்ப்பது வரை இதில் வலியுறுத்தப்படுகிறது. எந்த ஒரு சூழலிலும், பவுடர் பாலுக்கு மாற சொல்லி வற்புறுத்தாத வகையில் தாய்மார்களை அரவணைத்து, பாதுகாப்பது சமூகத்தின் கடமையாக, இந்த வருடத்தின் கருத்தாக முன்வைக்கப்படுகிறது.

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

தாராளமாக போட்டுக்கொள்ளலாம். எந்தவிதமாக பாதிப்பும் குழந்தைக்கு ஏற்படாது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு காய்ச்சல் வந்தால், தாய்ப்பால் கொடுக்கலாமா?

பெரும்பாலும் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பில்லை. அப்படி காய்ச்சல் இருக்கும்போது, தாய்ப்பால் கொடுக்கலாம். கடுமையான சளி, இருமல் இருக்கும்போது முக கவசம் அணிந்து பால் கொடுப்பது, சிறந்தது.

Next Story