மடிக்கணினி பராமரிப்பு; கவனிக்க வேண்டிய விஷயங்கள்


மடிக்கணினி பராமரிப்பு; கவனிக்க வேண்டிய விஷயங்கள்
x
தினத்தந்தி 1 Aug 2021 4:57 PM GMT (Updated: 1 Aug 2021 4:57 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியிருக்கும் அச்சுறுத்தலால் வீட்டில் இருந்தபடி அலுவலக வேலை, ஆன்லைன் கல்வி போன்ற நடைமுறைகள் புழக்கத்திற்கு வந்துவிட்ட நிலையில் மடிக்கணினியின் பயன்பாடும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனை உபயோகிக்கும் நேரமும் அதிகரிப்பதால் பராமரிப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

* மடிக்கணினியை உபயோகிப்பதற்கு முன்பு அதன் திரை பகுதியை துடைப்பதற்கு மறக்கக்கூடாது. சாதாரண துணியை பயன்படுத்தி துடைக்கவும் கூடாது. மடிக்கணினியை துடைப்பதற்கென்றே பயன்பாட்டில் இருக்கும் துணிகளை பயன்படுத்துவதுதான் சரியானது. சிலர் கைகளால் திரையை துடைக்கவும் செய்வார்கள். அப்படி விரல்களை கொண்டு திரைக்கு அழுத்தம் கொடுத்தால் கைத் தடங்கள் திரையில் பதிந்துவிடும். திரை சேதமடைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. மெல்லிய துணியை பயன்படுத்தி துடைப் பதுதான் நல்லது.

* கம்ப்யூட்டரை போல மடிக்கணினியை ‘ஆன்’ செய்த நிலையிலேயே நீண்ட நேரம் வைத்திருக்கவும் கூடாது. மடிக்கணினியை பயன்படுத்த தொடங்குவதற்கு முன்பு என்ன வேலை செய்யப்போகிறோம், எவ்வளவு நேரத்தில் முடிக்கப்போகிறோம் என்ற திட்டமிடல் அவசியம். அதன் மூலம் அதன் பயன்பாட்டு நேரத்தை குறைக்கலாம். மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது சிறிது நேரம் இடைவெளி எடுக்க நேர்ந்தாலோ, செல்போன் அழைப்புக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தாலோ ‘ஹைபர்னேட்’ நிலையில் வைத்திருங்கள். அது மின்சார பயன்பாட்டை குறைக்க உதவும். மடிக்கணினியின் ஆயுளும் அதிகரிக்கும். தேவைப் படாத நேரத்தில் ஆப் செய்துவிடுவது நல்லது.

* மடிக்கணினி வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சுற்றியுள்ள பகுதி சுத்தமாக இருக்க வேண்டும். மடிக்கணினிக்கு சுத்தமான காற்று கிடைக்கிறதா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதனை வைக்கும் இடத்தை சூழ்ந்து தூசு, அழுக்குகள் படிந்திருந்தால் அவற்றை மடிக்கணினியில் உள்ள மின் விசிறி உள்ளிழுத்துவிடும். இதனால் அதன் அடிப்பாகம் சூடாகும். பழுது ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. தூசி, ஈரப்பதமான பகுதியில் இருந்து மடிக்கணினியை விலக்கி வைப்பதே பாதுகாப்பானது.

* மடிக்கணினியை மேஜையில் சமதள பரப்பில் வைத்து பயன்படுத்துவதுதான் சரியானது. மடிக்கணினி முன்பு நொறுக்குத்தீனிகளை வைத்து சாப்பிடுவது தவறான பழக்கம். அதன் தட்டச்சு பகுதியில் அவை படிந்து தூசுக்கள், அழுக்குகள் சேர்வதற்கு வழிவகுத்துவிடும்.

* வெளி இடங்களுக்கோ, பயணத்தின்போதோ மடிக்கணினியை கொண்டு செல்வதாக இருந்தால் அதன் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். சாதாரண பேக்கை விட மடிக்கணினிக்கு ஏற்ற பேக்தான் அதன் பாதுகாப்பை உறுதி செய்யும். அந்த பேக்கின் உள் பகுதியிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி மடிக்கணினியை பராமரிக்க வேண்டும். எந்தவொரு சூழலிலும் மடிக்கணினி சேதம் அடைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

* மடிக்கணினியில் ஆன்டி வைரஸ் அப்ளிகேஷனை நிறுவுவது முக்கியமானது. அது காலாவதியாகும் காலத்தை கவனத்தில் கொண்டு புதுப்பிக்கவும் மறக்கக் கூடாது. ஏனெனில் வைரஸ், மடிக்கணினியின் வேகத்தை குறைத்துவிடும். அதன் செயல்பாட்டை முற்றிலும் நிறுத்திவிடவும் கூடும்.

* மடிக்கணினியை நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள். பயன்பாட்டு நேரம் அதிகரித்தால் அதன் செயல்பாட்டு வேகம் குறைந்துவிடும். மடிக்கணினியும் சூடாகிவிடும். ஆயுளும் குறையக் கூடும்.

* மடிக்கணினி சூடாவதை தவிர்க்க ‘கூலிங் பேட்’ பயன்படுத்தலாம். அது மடிக்கணினிக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். அதிகம் சூடாகும் சூழலை அறவே தவிர்த்துவிடச் செய்யும். ஆண்டுக்கு ஒருமுறையாவது மடிக்கணினியை சர்வீஸ் செய்வதும் நல்லது. அதுவும் அதன் ஆயுளை அதிகரிக்க செய்யும்.

Next Story