மாதுளை இலைகளும் மருந்தாகும்..!


மாதுளை இலைகளும் மருந்தாகும்..!
x
தினத்தந்தி 20 Sep 2021 4:07 PM GMT (Updated: 20 Sep 2021 4:07 PM GMT)

பழம், இலை, பூ, பட்டை என மாதுளை மரத்தின் அனைத்து பகுதிகளையும் மருத்துவ ரீதியாக பயன்படுத்தலாம். அதிலும் மாதுளை பழம் போலவே, இலையும் மகத்தான சக்தி வழங்கக்கூடியது.

மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு மாதுளை இலைகள் பயன்படுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? மாதுளை இலைகளில் இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வாய் பகுதியில் படர்ந்திருக்கும் பாக்டீரியாக்களை அப்புறப்படுத்த உதவுகின்றன. வாய் புண்ணுக்கு மாதுளை இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சாற்றை பயன்படுத்தலாம்.

மாதுளை இலைகள் தரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிவோம்.

இருமல், சளி:

மாதுளை பழத்தை போலவே, இலைகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுபவை. சளி மற்றும் இருமல் இருந்தால், மாதுளை இலைகளை கொண்டு காபி தயாரித்து பருகலாம். இந்த செயல்முறை எளிதானதுதான். ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். இலைகள் நன்கு வெந்ததும் வடிகட்டி பருகலாம். இந்த தண்ணீரை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் இருமல் தணியும். தொண்டையில் இருக்கும் நோய்த்தொற்றை அகற்ற உதவும். மாதுளையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது என்பதால் நோய் எதிர்ப்பு தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.

தூக்கமின்மை:

மாதுளை இலைகள், தூக்கமின்மைக்கும் நிவாரணம் தரக்கூடியவை. ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை விழுதாக அரைத்து 200 மி.லி. தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். 50 மி.லி. குறையும் வரை கொதிக்கவைத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனை இரவில் தூங்குவதற்கு முன்பு பருகி வரலாம். அது ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்.

பருக்கள்:

எதிர்பாராதவிதமாக ஏற்படும் கொப்புளங்களை போக்குவதற்கும் மாதுளை இலைகளை பயன் படுத்தலாம். பருக்கள் மீதும் பூசலாம். மாதுளை பழ விதைகளையும் முகப்பருக்கள் மீது தடவி வரலாம். மாதுளை சாறு முக அழகை மேம்படுத்தும் திறன் கொண்டது. இது சரும துளைகளை மூடி முகத்திற்கு பொலிவு சேர்க்கும். வயிற்று பகுதியை தட்டையாக வைத்திருந்து, கட்டுடல் அழகை பேண விரும்பு பவர்கள் மாதுளை இலை சாறு பருகி வரலாம்.

வயிற்று வலி:

மாதுளை இலைகள் செரிமான செயல் முறைக்கு நன்மை பயக்கும். வயிற்று வலி மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகள் இருந்தால், மாதுளை இலைகளை மருந்தாக உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் செரிமானத்தை தூண்ட உதவும். அதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அத்துடன் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் நீங்கும். இந்த பிரச்சினைகளுக்கு மாதுளை இலைகளை தேநீராக தயாரித்து பருக வேண்டும். இருமல், சளி தவிர பிற நோய் பாதிப்புகளுக்கு மாதுளை இலை சாற்றை வாரம் இரண்டு முறை மட்டுமே உட்கொள்ள வேண்டும். மாதுளை இலைகளை அதிகம் உட்கொள்வது பல்வேறு பக்க விளைவுகளுக்கு வழி வகுத்துவிடும்.

தோல் அழற்சி:

நாள்பட்ட அரிப்பு, தோல் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. தடிப்பு, வீக்கம், சருமம் சிவத்தல் போன்ற பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். இந்த நோயை குணப் படுத்த மாதுளை இலைகளை பயன் படுத்தலாம். அதனை விழுதாக அரைத்து பாதிப்புக்குள்ளான இடத்தில் தடவி வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.


Next Story