ஒரு பெண்ணின் போராட்டம்


ஒரு பெண்ணின் போராட்டம்
x
தினத்தந்தி 21 Sep 2021 2:59 PM GMT (Updated: 21 Sep 2021 2:59 PM GMT)

“நான் ஏழையாக இருக்கலாம். படிக்காதவளாக இருக்கலாம். ஆனால் மலைகளும் ஏரிகளும் எங்களின் பொக்கிஷங்கள் என்பதைத் தெரிந்துவைத்திருக்கிறேன்’’ என்கிறார், பெரு நாட்டைச் சேர்ந்த மேக்சிமா ஆக்கூன்யா த சாப்.

தனியொரு பெண்ணாக சர்வதேச தங்கச்சுரங்க நிறுவனத்தை எதிர்த்துப் போராடி, வெற்றி பெற்றிருக்கிறார். 1994-ம் ஆண்டு மேக்சிமாவின் குடும்பம் மலைப் பிரதேசத்தில் 60 ஏக்கர் நிலத்தை வாங்கி, குடிபெயர்ந்தது. சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டு, விவசாயம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர்.

தென் அமெரிக்காவின் ஒரு சுரங்க நிறுவனத்துக்கு பெரு அரசாங்கம் 7,400 ஏக்கர் நிலத்தை வழங்கி இருந்தது. அந்த நிலத்துக்கு அருகில் மேக்சிமாவின் நிலம் இருப்பதால், அதையும் அபகரிக்க அவர்கள் திட்டமிட்டனர். படிப்பறிவு இல்லாத ஏழைப் பெண், மிரட்டலுக்குப் பயந்து ஓடிவிடுவார் என்று நினைத்து ராணுவத்தினரும், சுரங்க நிறுவனத்தை சேர்ந்தவர்களும் அங்கு வந்தனர்.

“எங்களின் நிலத்தை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர முடியாது” என்று மேக்சிமாவும் அவரது கணவரும் உறுதியாக மறுத்தனர். உடனே காட்டுமிராண்டித்தனமான செயல்களில் அவர்கள் இறங்கினர். வீட்டில் உள்ள பொருட்களை வீசினர். ஆடுகளை அபகரித்தனர். அடித்த அடியில் மகள்களில் ஒருவரும், கணவரும் சுயநினைவை இழந்தனர். 2012-ம் ஆண்டு சுரங்க நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்தார் என்று மேக்சிமா மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. மாகாண நீதிமன்றமும் இவர்களைக் குற்றவாளிகளாகக் கருதி தீர்ப்பு வழங்கியது. 30 நாட்களில் இடத்தைக் காலி செய்யவேண்டும். இல்லாவிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், 1.4 லட்ச ரூபாய் அபராதமும் கட்டவேண்டும் என தீர்ப்பு வந்தது.

மேல் முறையீடு செய்தார் மேக்சிமா. வழக்குக்காக தொலைதூரத்தில் உள்ள நகரத்துக்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். பஸ்சில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றம் செல்லாவிட்டால், பாதகமாகத் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது. அதனால் 8 மணி நேரம் நடந்தே சென்று வந்தார், மேக்சிமா.

பக்கத்து கிராமங்களில் இவரைப் போலவே மேலும் சிலர் நிலம் கொடுக்க மறுத்து போராட்டங்களை நடத்தினர். 4 பேர் தங்கள் உயிர்களை இழந்தனர். போராட்டங்களுக்கு மக்களிடம் ஆதரவு பெருக ஆரம்பித்தது. தனியொரு பெண்ணின் போராட்டம் வெளி உலகத்துக்குத் தெரியவந்தது. மனித உரிமைகள் ஆணையம் அவருக்கு ஆதரவாக நின்றது. பல்வேறு சுற்றுச் சூழல் அமைப்புகளும் தங்கள் ஆதரவை அளித்தன. இரண்டு ஆண்டுகள் வழக்கு நீண்டுகொண்டே சென்றது. இறுதியில் மேக்சிமாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. ஆனாலும் தனக்கு மிரட்டல்கள் தொடர்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கிறார், மேக்சிமா.


Next Story