பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் என்றால் என்ன? பிரபலங்கள் முகத்திரை கிழிந்தது எப்படி? -முழு விவரம்


பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் என்றால் என்ன? பிரபலங்கள் முகத்திரை கிழிந்தது எப்படி? -முழு விவரம்
x
தினத்தந்தி 5 Oct 2021 6:01 AM GMT (Updated: 5 Oct 2021 6:01 AM GMT)

வெளிநாடுகளில் இந்தியர்கள் சொத்து குவிப்பு தொடர்பான ‘பண்டோரா பேப்பர்ஸ்’ ஆவண விசாரணையை கண்காணிக்க பல்வேறு விசாரணை அமைப்புகள் அடங்கிய கூட்டுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

புதுடெல்லி

வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து குவித்ததாக அனில் அம்பானி, சச்சின் தெண்டுல்கர், நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட 300-க்கு மேற்பட்ட இந்தியர்கள் தொடர்பான ஆவணங்கள் வெளியாகி உள்ளன.

பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, செஷல்ஸ் தீவு, ஹாங்காங், பெலிஸ் போன்ற நாடுகள், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு சொர்க்கமாக திகழ்கின்றன. கருப்பு பணம் மற்றும் முறைகேடான சொத்துகளை குவிப்பவர்கள், அதற்காக அந்த நாடுகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.

2016ம் ஆண்டு பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் பென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் ஊடகத்தில் வெளியானது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டன. இதில், திரை நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், டிஎல்ப் நிறுவனத்தின் தலைவர் கேபி சிங் மற்றும் அவருடைய 9 குடும்ப உறுப்பினர்கள், கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பனாமா பேப்பர்ஸ் மற்றும் பாரடைஸ் பேப்பர்ஸ் போன்ற முந்தைய  முதலீடுகளின் ரகசிய ஆவணங்கள் வெளியானதை தொடர்ந்து, மத்திய அரசு  கறுப்புப் பணத்தை (வெளிப்படுத்தப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகள்) மற்றும் வரி விதிப்புச் சட்டத்தை இயற்றியது. 

பனாமா மற்றும் பாரடைஸ் பேப்பர் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தோராயமாக (15.09.2021 நிலவரம்) ரூ. 20,352 கோடி பண முதலீடுகள்  கண்டறியப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தான்  ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் இணையதளத்தில் ரகசிய ஆவணங்களை  வெளியிட்டுள்ளனர். அதில், கடந்த 1970-களில் இருந்து வாங்கி குவிக்கப்பட்ட சொத்துகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 1996-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டுவரை வாங்கப்பட்ட சொத்துகள் மற்றும் முறைகேடான நிதி முதலீடுகள்தான் அதிகமாக உள்ளன.

பண்டோரா பேப்பர்ஸ் விசாரணையில், போலி நிறுவனங்களுக்கு எதிராக நாடுகள் நடவடிக்கையை தீவிரப்படுத்த தொடங்கிய பிறகும், எப்படி, அந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன என்ற விளக்கத்தை அளித்துள்ளது. பணமோசடி, பயங்கரவாத நிதி மற்றும் வரி ஏய்ப்பு போன்றவற்றை தடுக்க இதுபோன்ற போலி நிறுவனங்களை கொண்ட நாடுகள் தங்கள் நாட்டின் சட்ட திட்டங்களை தீவிரப்படுத்தியிருந்தன. ஆனால் அதன்பிறகும், இதுபோன்ற செயல்பாடுகள் நடந்துள்ளது எப்படி என்பதை பண்டோரா ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன.

வெளிநாடுகளில் நிதி சேவையில் ஈடுபட்ட 14 நிறுவனங்களில் இருந்து சொத்து குவிப்பு தொடர்பான 1 கோடியே 20 லட்சம் ஆவணங்களை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு பெற்றுள்ளது. 117 நாடுகளை சேர்ந்த 150 ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் 600-க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

அந்த ஆவணங்களில், 91 நாடுகளை சேர்ந்த முன்னாள், இந்நாள் அதிபர்கள், பிரதமர்கள், தொழிலதிபர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, 35-க்கு மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கியதுடன், அவற்றின் மூலமாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 14 மாளிகைகளை வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர், பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் உள்ள ஒரு கம்பெனியை வாங்கியதன் மூலம், இங்கிலாந்தில் உள்ள 88 லட்சம் டாலர் மதிப்புள்ள மாளிகையின் உரிமையாளர் ஆனார். அந்த கட்டிடத்தில் அவருடைய மனைவி செர்ரியின் சட்ட நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

செக் குடியரசு பிரதமர் ஆன்ட்ரெஜ் பேபிஸ், ஈகுவடார் அதிபர் கில்லர்மோ லஸ்சோ, கென்யா அதிபர் உகுரு கென்யட்டா, பாப் பாடகி ஷகிரா, சூப்பர் மாடல் கிளாடியா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பெயர் இல்லாவிட்டாலும், அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ள அந்நாட்டு நிதி மந்திரி சவுகத் பயாஸ் அகமது தரின் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன. .

இதுபோல், ரஷிய அதிபர் புதினுக்கு நெருக்கமான ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ரஷியா, அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 130 கோடீஸ்வரர்களின் பெயர்கள் உள்ளன.

இதுபோல், 300-க்கு மேற்பட்ட இந்தியர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர்களில் தொழிலதிபர்கள் அனில் அம்பானி, வினோத் அதானி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், பெண் தொழிலதிபர் கிரண் மசும்தார் ஷா, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், பெண் தரகர் நீரா ராடியா, சதீஷ் சர்மா உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

வெளிநாடுகளில் இந்தியர்கள் சொத்து குவிப்பு தொடர்பான ‘பண்டோரா பேப்பர்ஸ்’ ஆவண விசாரணையை கண்காணிக்க பல்வேறு விசாரணை அமைப்புகள் அடங்கிய கூட்டுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரிய (சி.பி.டி.டி.) தலைவர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, நிதி புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் இடம்பெறுகிறார்கள்.

விசாரணை அமைப்புகள் நடத்தும் விசாரணையை இக்குழு கண்காணிக்கும். மேலும், உறுதியான விசாரணை நடைபெறுவதற்காக, சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோர் பற்றிய தகவல்களை வெளிநாட்டு அரசுகளிடம் மத்திய அரசு கேட்டு பெறும்.

அதன் அடிப்படையில், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story