கட்டிட கலையில் புதுமை


கட்டிட கலையில் புதுமை
x
தினத்தந்தி 26 Nov 2021 4:28 PM GMT (Updated: 26 Nov 2021 4:28 PM GMT)

கட்டிட கலை ஏராளமான உட்பிரிவுகளை கொண்டிருக்கிறது. கட்டிட கலை பற்றி படிப்பதும் தெரிந்து கொள்வதுமே ஒரு வகை சுவாரசியம் என்றால், புதுமை கட்டிட கலை என்றொரு வகையே இருந்தால் எப்படி இருக்கும்?

வழக்கமான பாணியில் அல்லாத கட்டிடங்கள், புதுமை கட்டிடம் வகையில் அடங்குகிறது. வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு பொருள் அல்லது விலங்கு, பிடித்தமான வடிவம் போன்றவற்றை மாதிரியாக கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள் இவ்வகையில் வருகின்றன.

வீடு சதுரமாகவோ, செவ்வகமாகவோதான் இருக்க வேண்டுமா? அரை வட்ட வடிவிலோ, கூடை வடிவிலோ, யானை வடிவிலோ இருக்கக்கூடாதா? என சிந்தித்ததன் விளைவே புதுமை கட்டிட கலையின் அடிப்படையாக இருந்திருக்கக்கூடும். 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ‘பாஸ்டில் யானை’ என்ற கட்டிடம் யானை வடிவில் கட்டப்பட்டிருந்தது. இதுவே, நவீன உலகில் முதல் நாவல்டி வகை கட்டிடமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இவ்வகையான கட்டிடங்கள் பெரும்பாலும் அடுத்தவர்களை ஈர்ப்பதற்காக கட்டப்படுகின்றன. வழக்கமான பயன்பாட்டுக்கு இவை கட்டப்படாத போதும், கட்டிட கலை மரபில் புதிய இலக்கணத்தை இவை படைத்தன. குறிப்பிட்ட பகுதியின் அடையாளமாக இவ்வகை கட்டிடங்கள் மாறிய வரலாறும் உண்டு.

இந்தியாவில் இதுபோன்ற கட்டிடங்கள் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கின்றன. அவை கூட வாழிடங்களாக இல்லாமல் வர்த்தக ரீதியிலேயே இருக்கின்றன. வெளிநாடுகளில் அப்படி இல்லை. அலுவலகங்கள்கூட இவ்வகையில் வித்தியாசமாக அமைக்கப்படுகின்றன. தேநீர் கோப்பை, கூடை, இசைக்கருவிகள் என பல்வேறு வடிவங்களில் கட்டப்படும் இக்கட்டிடங்கள் புதுமை விரும்பிகளுக்கானவை. சாலையோர உணவு விடுதிகள், சுற்றுலாத்தலங்களில் தங்கும் விடுதிகள் இதுபோன்று புதுமையான வடிவங்களில் கட்டப்படும் போது அவை வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்ப்பதற்கான யுக்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தற்போதுள்ள நாவல்டி வகை கட்டுமானக்கலை 1930-ம் ஆண்டுகளுக்கு பிறகே பிரபலமடைய ஆரம்பித்தது.

சொந்தமாக வீடு கட்டுவதே சிரமம் என்ற நிலையில் இதுபோன்ற வீடுகளை கட்டுவது மேலும் சிரமம் என நினைக்கலாம். ஆனால், மனமிருந்தால், நிச்சயம் நமக்கு பிடித்தமானதொரு கட்டிடத்தை கட்டி அதில் வசிக்க தடையேதும் இல்லை.


Next Story