கோபமும்.. ரத்த அழுத்தமும்..


கோபமும்.. ரத்த அழுத்தமும்..
x
தினத்தந்தி 14 Jan 2022 4:12 PM GMT (Updated: 14 Jan 2022 4:12 PM GMT)

உடல் ஆரோக்கியத்தை போல மன நலனையும் பேண வேண்டும். சிலர் எப்போதும் சிடுசிடுவென இருப்பார்கள். சிலரோ பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பார்கள். மனதை நிதானமாக வைத்திருக்காமல் ஒருவித பதற்றத்துடனே காணப்படுவார்கள். அப்படி இயல்பற்ற நிலையில் இருப்பது ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும்.

இதயத்திலிருந்து ரத்தம் சீரான அழுத்தத்தோடு வெளிப்படும்போது அது உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும், திசுக்களுக்கும் பரவலாக சென்றடையும். அப்படி சீரான அழுத்தத்தோடு தொடர்ச்சியாக ரத்தம் சென்றால் தான் திசுக்களால் சீராக இயங்க முடியும். அதற்கு இடம் கொடுக்காமல் உடலில் மாற்றங்கள் ஏற்படும்போது ரத்த அழுத்த அளவுகளும் மாறுபடக் கூடும். மிகவும் குறைந்த அளவு ரத்த அழுத்தம் இருந்தாலோ, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டாலோ அது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும்.

ரத்தமானது, ரத்த நாளங்களின் வழியே பாய்ந்து செல்லும்போது ரத்தநாளச்சுவர்களில் ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்த மாகும். 120 அளவுக்கு மேலுள்ள அழுத்தம், ‘சிஸ்டோலிக்’ அழுத்தம் எனப்படும். 80 அளவுக்கு கீழுள்ள தளர் அழுத்தம் ‘டயஸ்டோலிக்’ அழுத்தம் எனப்படும்.

ஒரு மனிதருக்கு பொதுவாக ‘சிஸ்டோலிக்’ அழுத்தம், 100-ல் இருந்து 120 மி.மீ பாதரச அளவில் இருக்க வேண்டும். அதுபோல் ‘டயஸ்டோலிக்’ அழுத்தம், 70-ல் இருந்து 80 மி.மீ பாதரச அளவில் இருக்க வேண்டும்.

ஒருவருக்கு ரத்த அழுத்தமானது தொடர்ச்சியாக 120/80 மி.மீ. பாதரச அளவிற்கு மேல் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தம் எனப்படும். அந்த உயர் அழுத்தங்களினால் உடலில் விரும்பத்தகாத பாதிப்புகள் உண்டாகும். ஒருவருடைய உடல், மன நல செயல் பாடுகளில் ஏற்படும் மாற்றம் ரத்த அழுத்த அளவுகளில் வெளிப்படும். மன உளைச்சல், பதற்றம், பீதி, அச்சம், கோபம், கடுமையான உடற்பயிற்சி, கடும் உடல் உழைப்பு, கடும் குளிர் போன்ற சமயங்களின் போது வழக்கத்தை விட ரத்த அழுத்தம் உயர்ந்தே காணப்படும். நிலைமை சீரடையும்போது ரத்த அழுத்தம் குறைய தொடங்கும். இப்படி உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்படும் ரத்த அழுத்தம், நாளடைவில் நிலையானதாகி உயர் ரத்த அழுத்த அளவுகளிலேயே நிலைத்து விடும்.

சிலருக்கு ஏன் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்ற காரணத்தை உடனே கண்டறிய முடியாது. அப்படி காரணத்தை கண்டறிய முடியாமல் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகுபவர்களின் பெற்றோர் மற்றும் முன்னோர்கள் பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வித்திடும் வகையிலான உடல் செயல்பாடுகளை கொண்டிருப்பார்கள். மன நலனினும் அதன் தாக்கத்தை உணர முடியும். குறிப்பாக மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இவர்களால் அமைதியான முறையில் வாழ்க்கை நடத்த முடியாது.

சாப்பிடும் உணவில் உப்பை அதிகம் சேர்ப்பது ரத்த நாளங்களை முறுக்கேறச் செய்து ரத்த அழுத்தத்திற்கு வித்திட்டுவிடும் என்பது அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும்.


Next Story