கிராம மக்களின் நரி பொங்கல்


கிராம மக்களின் நரி பொங்கல்
x
தினத்தந்தி 15 Jan 2022 12:28 AM GMT (Updated: 15 Jan 2022 12:28 AM GMT)

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 25 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘நரி பொங்கல் திருவிழா’வை கொண்டாடி வருகிறார்கள்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 25 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘நரி பொங்கல் திருவிழா’வை கொண்டாடி வருகிறார்கள். இது ‘வங்காநரி ஜல்லிக்கட்டு’ என்று அழைக்கப்படுகிறது.

மாட்டுப் பொங்கல் அன்று வாழப்பாடி பகுதியில் நடக்கும் இந்த நரி பொங்கல் திருவிழாவை பார்ப் பதற்கு, சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோர் இங்கு கூடுவார்கள்.

நரி முகத்தில் விழித்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல மழை பொழியும், விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம் பிக்கையாக இருந்து வருகிறது.

வங்காநரி ஜல்லிக்கட்டு கொண்டாட்ட தினத்திற்கு முன்பாக, நரியை பிடிப்பதற்காக பொதுமக்கள் மேளதாளத்துடன் வீட்டுக்கு ஒருவர் வீதம் மலைப்பகுதிக்குச் சென்று வலைகளை விரிப்பார்கள். அப்போது ஏதாவது ஒரு வலையில் ஒரு குட்டி நரி சிக்கி விடும். அந்த நரியை பிடித்து வந்து, குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம், மாலை போன்றவற்றால் அலங்கரிப்பார்கள். பின்னர் அந்த நரியை முக்கிய தெருக்களில் ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.

அப்போது, அங்கு திரண்டு இருக்கும் ஏராளமான பொதுமக்கள் நரியை வணங்கி வழிபாடு நடத்துவார்கள். இதனை தான் ‘நரி பொங்கல்’ என்றும், ‘வங்காநரி ஜல்லிக்கட்டு’ என்றும் அழைக்கிறார்கள். பொங்கல் வழிபாடுகள் முடிந்த பின்னர் குட்டி நரியை மீண்டும் அதே மலைப்பகுதியில் கொண்டு போய் விட்டுவிடுவார்கள்.

வறட்சி நீங்கி மழை வளம் பெருக இந்த விழாவை கிராம மக்கள் நடத்தி வருகின்றனர்.

Next Story