ராகுல்காந்தி காரணமா...! பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணையாதது குறித்து புதிய தகவல்....!


ராகுல்காந்தி காரணமா...! பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணையாதது குறித்து புதிய தகவல்....!
x
தினத்தந்தி 27 April 2022 12:23 PM GMT (Updated: 27 April 2022 12:23 PM GMT)

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணையும் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்தது.

புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு தோல்வியை தழுவி வருகிறது.

இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுலை விலகி இருக்கச் சொல்லி குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். காங்கிரசை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை கூட்டம் ராஜஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் உள்கட்சி தேர்தலையும் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் காங்கிரஸ் நிர்வாகிகளை முழுமையாக மாற்றி அமைக்க சோனியா திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 2024-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்ய அவர் புதிய வியூகங்களுடன் சோனியாவை அணுகி உள்ளார்.

சோனியாவுடன் அவர் 3 நாட்கள் தொடர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பல்வேறு குற்றங்களை விவரித்தார். குறிப்பாக 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதின் அவசியத்தை சுட்டிக் காட்டினார்.

இதை தொடர்ந்து 2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான செயல் திட்ட குழுவை சோனியா நியமித்தார். அதோடு பிரசாந்த் கிஷோரையும் காங்கிரசில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து காங்கிரஸ் உயர்மட்டக் குழு இறுதிக்கட்ட ஆலோசனையும் நடத்தியது.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைய மறுத்து விட்டதாக தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜே வாலா தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி இந்த தகவலை வெளியிட்ட சிறிது நேரத்தில் பிரசாந்த் கிஷோர் ஒரு டுவிட் செய்தார்.

அதில் காங்கிரசில் வேரூன்றி இருக்கும் அமைப்பு ரீதியான பிரச்சினைகளை சீர்திருத்தம் மூலமாக சரி செய்வதற்கு கூட்டு தலைமை அவசியம் என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் பிரசாந் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையாதது ஏன்? என்பது தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது பிரசாந்த் கிஷோர், சந்திர சேகர் ராவுடன் தெலுங்கானா தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்தார். இது காங்கிரசில் உள்ள பல தலைவர்களுக்கு அதிருப்தியை அளித்தது.

மேலும் தேர்தலில் வெற்றி பெற்றால் அது பிரசாந்த் கிஷோரின் வெற்றியாக கருதப்படும். இதனால் அவர் இணைவது சரியாக இருக்காது என்று மூத்த தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் மற்றும் தலைமை அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதையும் சில மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

பிரதமர் வேட்பாளர், காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற 2 பேரை கொண்டு வர பிரசாந்த் கிஷோர் விரும்பினார். அதற்காக அவர் பிரியங்காவை காங்கிரஸ் கட்சி தலைவராக்க விரும்பினார். ஆனால் மேலிடமோ ராகுல் காந்தியை தான் மீண்டும் தலைவராக்குவது என்று விரும்பியது.

பிரசாந்த் கிஷோரின் இந்த யோசனையை காங்கிரஸ் தலைவர்கள் பலர் விரும்பவில்லை. மேலும் பீகார், மராட்டியம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கூட்டணி தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தையும் ஏற்கவில்லை.

காங்கிரஸ் கட்சியில் தனக்கு உயர் அதிகாரம் கொண்ட பதவி வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் குஜராத், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநில தேர்தல்களின்போது முடிவு எடுக்கும் அதிகாரத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. இதையும் காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை.

மேலும் காங்கிரசின் உயர்மட்ட முடிவெடுப்பவர்களில் ஒருவரான ராகுல் காந்தி,  ஒதுங்கியே இருந்தார். அவர் தனது திட்டமிடப்பட்ட வெளிநாட்டு பயணத்தை கட்சியின் வளர்ச்சி ஆலோசனைக்காக ஒத்திவைத்திருக்க முடியும்  என்று பிரசாந்த் கொஷோருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

உயர் அதிகாரம் கொண்ட பதவி கிடைக்காதது, மாநில தேர்தல்களில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடம் வழங்க தயங்கியது போன்ற காரணங்களால் பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணையவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Next Story