நான்காவது காலாண்டில் ஜிந்தால் ஸ்டீல் உருக்கு உற்பத்தி 15 லட்சம் டன்


நான்காவது காலாண்டில் ஜிந்தால் ஸ்டீல் உருக்கு உற்பத்தி 15 லட்சம் டன்
x
தினத்தந்தி 17 April 2019 8:13 AM GMT (Updated: 17 April 2019 8:13 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர் நிறுவனம் 15 லட்சம் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்துள்ளது. இது புதிய சாதனை அளவாக கருதப்படுகிறது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது 12.60 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, உற்பத்தி 19 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் உருக்குப் பொருள்கள் விற்பனை 23 சதவீதம் அதிகரித்து 14.50 லட்சம் டன்னாக இருக்கிறது. 2017-18 நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 11.88 லட்சம் டன்னாக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர் நிறுவனப் பங்கு ரூ.86.35-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.91.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ.85.95-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.88.35-ல் நிலைகொண்டது.

ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம், நான்காவது காலாண்டில், 42 லட்சம் டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்து இருக்கிறது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 சதவீதம் குறைவாகும். அப்போது உற்பத்தி 43 லட்சம் டன்னாக இருந்தது.

இதே காலத்தில் இந்நிறுவனத்தின் தட்டை வடிவ உருக்கு பொருள்கள் உற்பத்தி 30 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. நீள்வகை உருக்கு பொருள்கள் உற்பத்தி 8 சதவீதம் குறைந்து 9 லட்சம் டன்னாக இருக்கிறது.

Next Story