தினம் ஒரு தகவல் : தாய்ப்பால் கொடுக்கும் போதே கருவுற்றால்...


தினம் ஒரு தகவல் : தாய்ப்பால் கொடுக்கும் போதே கருவுற்றால்...
x
தினத்தந்தி 19 Nov 2019 7:54 AM GMT (Updated: 19 Nov 2019 7:54 AM GMT)

குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதில் இப்போதைய இளம் தாய்களுக்கு குழப்பம் உண்டு. அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம் என்கிறது மருத்துவ அறிவியல்.

தாய்ப்பால் கொடுக்கும் போதே அந்த தாய் மீண்டும் கருவுற்றால் தாய்ப்பால் தருவதை தொடரலாமா என்ற சந்தேகமும் பலருக்கு உண்டு. கருவுற்றாலும் தாய்ப்பால் சுரக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால், அடுத்த குழந்தை பிறந்த பிறகும் தாய் விரும்பினால் இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து தாய்ப்பால் கொடுக்கலாம். தாயின் உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன், கர்ப்ப காலம் நல்லபடியாக இருந்தால், தாய்ப்பால் கொடுப்பதை தொடர்வதில் தவறில்லை.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், அவர்கள் கருவுறவே முடியாது என்றும் கூற முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தாய்ப்பாலை உற்பத்தி செய்ய உதவும் புரோலாக்டின் எனும் ஹார்மோன் உடலில் அதிக அளவில் சுரக்கும். அந்த ஹார்மோன் ஓவுலேஷன்’ என்ற நிலையான சினைப் பையிலிருந்து கருமுட்டை வெளியாவதை தடை செய்யும். இதனால் கருவுற முடியாத சூழல் ஏற்படும்.

புரோலாக்டின் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால் கருமுட்டை வெளியாவது தடைபடாமல், கரு உருவாவதற்கான வாய்ப்பு உண்டு. உதாரணமாக, இரவு முழுவதும் குழந்தை பால் குடிக்காமல் இருந்தால் இத்தகைய நிலை ஏற்படலாம். பிரசவத்துக்கு பிறகு, உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் சீரற்ற நிலை ஏற்படும். அதனால் கருவுற்றிருப்பதை அறியாமலேயே சில காலம் தாய்ப்பால் கொடுக்கும் நிலை ஏற்படும்.

சில தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களுக்கு கர்ப்ப கால மசக்கை எனும் வாந்தி அதிகமாகலாம். திட்டமிட்டு உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையை சமாளிக்கலாம். கர்ப்ப காலத்தில் தாய்ப்பால் கொடுப்பதை தொடரும்போது ஆரோக்கியமான சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மிகத் தீவிரமான வாந்தி ஏற்பட்டால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும். தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் போது மீண்டும் கருவுற்ற நான்கு அல்லது ஐந்தாவது மாதத்தில் தாய்ப்பால் சீம்பாலாக மாற வாய்ப்புண்டு. அதை குடிக்கும் குழந்தை தாய்ப்பாலின் சுவையில் மாற்றத்தை உணரும். இதனால் குழந்தை பால் குடியை வெறுக்கலாம். சில நேரம் அதிக ஆர்வத்துடன் பால் குடிக்கலாம். ஒரு வேளை, பிறந்த குழந்தைக்கு ஒரு வயதுக்கும் குறைவாக இருந்து, அடுத்த கர்ப்பகாலத்திலும் தாய்ப்பாலைத் தொடரும்போது குழந்தையின் எடை சராசரியாக அதிகரிக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

கர்ப்ப காலம் அதிகரிக்க அதிகரிக்க, தாய்ப்பால் சுரப்பு சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கலாம். இந்த நிலையில் குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கிறதா என்பதை கீழ்க்காணும் முறையில் உறுதி செய்யலாம். குழந்தை சுறுசுறுப்பாக இருக்கும். உடல் எடை வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் சராசரியாக அதிகரிக்கும். சராசரியாக நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 முறை மலம், சிறுநீர் கழிக்கும். குழந்தை நன்றாகத் தூங்கும்.

Next Story