நடப்பு பருவத்தின் முதல் 3 மாதங்களில் 10 லட்சம் பொதிகள் பருத்தி ஏற்றுமதி இந்திய பருத்தி சங்கம் தகவல்


நடப்பு பருவத்தின் முதல் 3 மாதங்களில் 10 லட்சம் பொதிகள் பருத்தி ஏற்றுமதி இந்திய பருத்தி சங்கம் தகவல்
x
தினத்தந்தி 31 Jan 2020 10:18 AM GMT (Updated: 31 Jan 2020 10:18 AM GMT)

நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் பருத்தி ஆடைகளின் பங்கு ஏறக்குறைய 70 சதவீதமாக உள்ளது. இந்திய உற்பத்தி துறையில் ஜவுளித்துறையின் பங்கு 10 சதவீதமாக இருக்கிறது.

மும்பை

நடப்பு 2019-20 சந்தை பருவத்தின் முதல் 3 மாதங் களில் (அக்டோபர்-டிசம்பர்) 10 லட்சம் பொதிகள் பருத்தி ஏற்றுமதி ஆகி இருக் கிறது என இந்திய பருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான், பஞ்சாப்

இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் பருத்தி உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. நம் நாட்டில் பருத்தி சந்தை பருவம் என்பது அக்டோபரில் தொடங்கி செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.

உலக அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் பருத்தியை மூலப்பொருளாகக் கொண்டு பல்வேறு தயாரிப்புகளை அளிப்பதிலும் நம் நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்திய ஜவுளி மற்றும் பருத்தி துறைகள் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.

3.61 கோடி பொதிகள்

உள்நாட்டில், கடந்த 2018-19 சந்தை பருவத்தில் 3.61 கோடி பொதிகள் பருத்தி உற்பத்தியாகும் (ஒரு பொதி என்பது 170 கிலோ பருத்தியை கொண்டது) என பருத்தி ஆலோசனை வாரியம் கூறி இருந்தது. ஆனால் இந்திய பருத்தி சங்கம் பருத்தி உற்பத்தி 3.12 கோடி பொதிகளாக குறையும் என தெரிவித்து இருந்தது. அதற்கேற்ப கடந்த அந்தப் பருவத்தில் 3.12 கோடி பொதிகள் பருத்தி உற்பத்தி ஆகி இருக்கிறது. இது முந்தைய பருவத்தின் (2017-18) உற்பத்தியை விட 14.52 சதவீதம் குறைவாகும். அப்போது உற்பத்தி 3.65 கோடி பொதிகளாக இருந்தது.

நடப்பு 2019-20 சந்தை பருவத்தில் ஒட்டுமொத்த பருத்தி ஏற்றுமதி 42 லட்சம் பொதிகளாக இருக்கும் என்றும், இது கடந்த பருவத்தில் செய்த ஏற்றுமதியை காட்டிலும் 11 சதவீதம் குறைவு என்றும் இச்சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நடப்பு சந்தை பருவத்தின் முதல் காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) பருத்தி ஏற்றுமதி 10 லட்சம் பொதிகளாக உள்ளது. இது பருவத்தின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 25 சதவீதம் ஆகும்.

நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தி 3.54 கோடி பொதிகளாக இருக்கும் என்றும் இது கடந்த ஆண்டின் உற்பத்தியை விட சுமார் 13 சதவீதம் அதிகம் என்றும் இந்திய பருத்தி சங்கம் முதலில் மதிப்பீடு செய்து இருந்தது. இப்போது அது மேலும், 13.6 சதவீதம் உயரும் என இச்சங்கம் தெரிவித்துள்ளது. இதே காலத்தில் பருத்தி பயன்பாடு 3.15 கோடி பொதிகளாக அதிகரிக்கும் என்று இச்சங்கம் கூறுகிறது.

அமெரிக்க வேளாண் துறை

அமெரிக்க வேளாண் துறை நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தி 3.90 கோடி பொதிகளாக இருக்கும் என்றும், கடந்த பருவத்தின் உற்பத்தியை விட (3.12 கோடி பொதிகள்) சுமார் 25 சதவீதம் உயரும் என்றும் மதிப்பீடு செய்து இருக்கிறது.

பருத்தி உற்பத்தியில் சரிவு ஏற்பட்டால் அது ஏற்றுமதியையும் பாதிக்கும். எனவே இறக்குமதி அதிகரிக்கும். இந்தப் பருவத்தில் பருத்தி இறக்குமதி 25 லட்சம் பொதிகளாக இருக்கும் என இந்திய பருத்தி சங்கம் தெரிவித்துள்ளது. இது கடந்த பருவத் தின் (2018 அக்டோபர்-2019 செப்டம்பர்) இறக்குமதியை காட்டிலும் 7 லட்சம் பொதிகள் குறைவாகும். அப்போது இறக்குமதி 32 லட்சம் பொதிகளாக இருந்தது.

ஆயத்த ஆடைகள்

நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் பருத்தி ஆடைகளின் பங்கு ஏறக்குறைய 70 சதவீதமாக உள்ளது. இந்திய உற்பத்தி துறையில் ஜவுளித்துறையின் பங்கு 10 சதவீதமாக இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 13 சதவீதமாகவும் இத்துறையின் பங்களிப்பு உள்ளது.

ஆயத்த ஆடைகளுக்கான தேவை பல நாடுகளில் குறைந்து இருப்பது மற்றும் உள்நாட்டு ஜி.எஸ்.டி. வரிகள் போன்றவற்றால் இத்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நடப்பு நிதி ஆண்டிலும் (2019-20) ஆடை ஏற்றுமதி நிலவரம் திருப்திகரமாக இருக்காது என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story