இந்திய மக்களின் ஆயுள்காலம் அதிகரிப்பு-ஆய்வில் தகவல்


இந்திய மக்களின் ஆயுள்காலம் அதிகரிப்பு-ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2020 10:48 PM GMT (Updated: 16 Oct 2020 10:48 PM GMT)

இந்தியாவில் மனிதர்களின் ஆயுள்காலம் பற்றி காந்திநகர் இந்திய பொதுசுகாதார நிறுவனத்தின் சீனிவாஸ் கோலி உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, ‘லேன்செட்’ மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.

புதுடெல்லி, 

இந்தியாவில் மனிதர்களின் ஆயுள்காலம் பற்றி காந்திநகர் இந்திய பொதுசுகாதார நிறுவனத்தின் சீனிவாஸ் கோலி உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, ‘லேன்செட்’ மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.

அதில் 1990-ம் ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்களின் ஆயுள் காலம் கூடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலங்கள் இடையே இதில் சமத்துவம் இல்லாத நிலை இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு தகவல்கள் வருமாறு:-

* 1990-ம் ஆண்டுஇந்தியாவில் மனிதர்களின் ஆயுள்காலம் என்பது 59.6 ஆண்டுகளாக இருந்தது. இது 2019-ம் ஆண்டு நிலவரப்படி 70.8 வருடங்களாக அதிகரித்துள்ளது.

* கேரளாவில் மனிதர்களின் ஆயுள்காலம் 77.3 ஆண்டுகள். இதுவே உத்தரபிரதேசத்தில் 66.9 வருடங்கள் ஆகும்.

* மக்கள் நோய்களுடனும், இயலாமையுடனும் நீண்ட காலம் வாழ்கிறார்கள்.

நாள்பட்ட நோய்கள் அதிகரிப்பு

* இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தொற்றுநோய்கள் சரிவை சந்தித்துள்ளன. அதே நேரத்தில் நாள்பட்ட நோய்கள் அதிகரித்துள்ளன என்கிறார் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆய்வாளருமான அலி மொக்தாத்.

* இந்தியாவில் கர்ப்பகாலத்தில் தாய் இறப்பது அதிகமாக இருந்தது உண்டு. ஆனால் இப்போது அது குறைந்து வருகிறது.

* இறப்பை ஏற்படுத்துவதில் 5-வது இடத்தில் இருந்த இதய நோய்கள் இப்போது முதல் இடத்துக்கு வந்து விட்டன. அதே போன்று புற்று நோய் இறப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கொரோனா உயிர்ப்பலிக்கு காரணம்

* கடந்த 30 ஆண்டுகளில் உடல்பருமன், உயர் ரத்த சர்க்கரை மற்றும் வெளிப்புற காற்றுமாசுபாடு போன்ற நீண்ட கால நோய்கள் மற்றம் தொடர்புடைய ஆபத்து காரணிகளுடன் இப்போது கொரோனா வைரசும் சேர்ந்து ஒரு சரியான புயலை ஏற்படுத்தி உள்ளது. இது கொரோனா உயிர்ப்பலிகளுக்கு காரணமாகிறது.

* இந்தியாவில் மொத்த நோய்ச்சுமைகளில் 58 சதவீதம் தொற்று நோய்தவிர்த்த பிற நோய்களால் ஏற்படுகிறது. இது 1990-ல் 29 சதவீதமாகத்தான் இருந்தது. தற்போது இரு மடங்காகி உள்ளது.

* 1990-களில் இருந்து இந்தியா ஆரோக்கியத்தில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால் குழந்தை மற்றும் தாய்வழி ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் நோய் மற்றும் இறப்புக்கு முதல் இடத்தில் உள்ளது. இது பீகார், உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்களில் மொத்த நோய் சுமைகளில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும்.

* காற்று மாசுபாட்டுக்கு அடுத்தபடியாக உயர் ரத்த அழுத்தம், 3-வது முன்னணி ஆபத்து காரணி ஆகும். இது இந்தியாவின் 8 மாநிலங்களில், முக்கியமாக தெற்கில் உள்ள மாநிலங்களில் அனைத்து சுகாதார இழப்புகளிலும் 10-20 சதவீதத்துக்கு காரணம் ஆகும்.

* இந்தியாவில் மரணம் ஏற்படுத்தும் 5 முக்கிய காரணிகள் காற்றுமாசுபாடு, உயர் ரத்த அழுத்தம், புகையிலை பயன்பாடு, மோசமான உணவு, ரத்த சர்க்கரை ஆகும்.

இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Next Story