கொரோனா தடுப்பூசி ஒப்புதல் கடந்து வந்த பாதை இதுதான்...


கொரோனா தடுப்பூசி ஒப்புதல் கடந்து வந்த பாதை இதுதான்...
x
தினத்தந்தி 4 Jan 2021 2:07 AM GMT (Updated: 4 Jan 2021 2:07 AM GMT)

ஒரே நாளில் 2 தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த ஒப்புதலுக்கு அந்த தடுப்பூசிகள் கடந்து வந்த பாதை பற்றிய ஒரு பதிவு இது.

புதுடெல்லி, 

இது இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.சி.ஓ.) நிபுணர் குழு, ஜனவரி 1 மற்றும் 2-ந் தேதிகளில் கூடியது. 

இந்திய சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவற்றின் தடுப்பூசியின் கட்டுப்படுத்தப்பட்ட அவசர ஒப்புதலுக்கு பரிந்துரைகளை வழங்கியது. நுரையீரல், நோய் எதிர்ப்பு, நுண்ணுயிரியல், மருந்தியல், குழந்தை மருத்துவம், உள்மருத்துவம் போன்ற பல துறைகளை சேர்ந்த அறிவார்ந்த நிபுணர்களை நிபுணர் குழு கொண்டுள்ளது.

புனே இந்திய சீரம் நிறுவனம் தனது தடுப்பூசி, வெளிநாடுகளில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினை கொண்ட 23 ஆயிரத்து 745 பேரின் பாதுகாப்பு, நோய் எதிர்ப்புத்திறன் மற்றும் செயல்திறன் பற்றிய தரவுகளை சமர்ப்பித்தது.

தடுப்பூசியின் ஒட்டுமொத்த செயல்திறன் 70.42 சதவீதம் ஆகும். மேலும், இந்திய சீரம் நிறுவனம், தனது தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை நாட்டில் 1,600 பேரிடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அந்த நிறுவனம், தனது இடைக்கால பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு தரவை சமர்ப்பித்தது. வெளிநாட்டு ஆய்வுகளின் தரவுகளுடன் ஒப்பிடத்தக்க தரவு கண்டறியப்பட்டது.

இதுபற்றி நிபுணர் குழு விரிவான விவாதத்துக்கு பிறகு, சில ஒழுங்குமுறை நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவசரகால சூழ்நிலையில் கட்டப்படுத்தப்பட்ட பயன்பாட்டுக்கு அனுமதி வழங்க பரிந்துரை செய்தது. அந்த நிறுவனம் இந்தியாவில் நடத்தி வருகிற மருத்துவ பரிசோதனை தொடரும்.

பாரத் பயோடெக் நிறுவன தடுப்பூசி

பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் புனே தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து, அவர்களிடமிருந்து பெற்ற செயலிழந்த கொரோனா வைரஸ் அடிப்படையிலான கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இது நாட்டிலும், உலக அளவிலும் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றிய தட பதிவுகளை நன்கு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிறுவனம் எலிகள், முயல்கள், சிரிய வெள்ளெலி போன்ற பல்வேறு விலங்கு இனங்களில் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு தரவை உருவாக்கி உள்ளது. மேலும் மனிதர்கள் அல்லாத விலங்கினங்கள் மற்றும் வெள்ளெலிகள் பற்றிய சவாலான ஆய்வுகளையும் நடத்தி உள்ளது.

இந்த தரவுகளை மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் அந்த நிறுவனம் பகிர்ந்து கொண்டது.

சுமார் 800 பேரிடம் முதல் இரு கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவற்றின் முடிவுகள், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது என்பதை காட்டின.

இந்தியாவில் மூன்றாம் கட்டமாக 25 ஆயிரத்து 800 தன்னார்வலர்களிடம் இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இன்று வரையில் 22 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு, இன்று வரை கிடைக்கும் தரவுகள் அது பாதுகாப்பானது என காட்டுகிறது.,

நிபுணர் குழு பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறன் குறித்த தரவுகளை மறு ஆய்வு செய்து, பொது நலனில் அவசர கால பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க பரிந்துரை செய்தது. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை தொடரும்.

2 ‘டோஸ்’

இந்திய சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிகள் 2 ‘டோஸ்’களாக வழங்கப்பட வேண்டும். இந்த தடுப்பூசிகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமித்து வைக்க வேண்டும்.

போதுமான பரிசோதனைக்கு பின்னர் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஏற்க மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு முடிவு செய்தது. அதன்படி அவசர சூழ்நிலைகளில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டுக்கு இந்திய சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story