புதியவகை கொரோனாவுக்கு எதிராக ‘கோவேக்சின்’ தடுப்பூசி செயல்படும் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? சுகாதார நிபுணர்கள் சந்தேகம்


புதியவகை கொரோனாவுக்கு எதிராக ‘கோவேக்சின்’ தடுப்பூசி செயல்படும் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? சுகாதார நிபுணர்கள் சந்தேகம்
x
தினத்தந்தி 5 Jan 2021 3:42 AM GMT (Updated: 5 Jan 2021 3:42 AM GMT)

புதியவகை கொரோனாவுக்கு எதிராக ‘கோவேக்சின்’ தடுப்பூசி செயல்படும் என்பதற்கு விஞ்ஞான ரீதியான ஆதாரம் உள்ளதா என்று சுகாதார நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி, 

பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்சின்’ கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடந்து வரும் நிலையில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இது, மாற்று மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. புதியவகை கொரோனாவுக்கு எதிராக செயல்படும் என்றும் கூறியுள்ளது.

இதற்கு சுகாதார நிபுணர்கள் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பிரபல தொற்றுநோயியல் நிபுணர் ‌ஷாகித் ஜமீல் கூறியதாவது:-

கோவேக்சின் தடுப்பூசி, பாதுகாப்பானது என்றும், 70 சதவீதத்துக்கு மேற்பட்ட செயல்திறனுடன் இருக்கும் என்றும் கூறுவதை நான் நம்பவில்லை. புதியவகை கொரோனாவுக்கு எதிராக இது செயல்படும் என்பதற்கு விஞ்ஞான ரீதியான ஆதாரம் இருக்கிறதா?

ஒப்புதல் வழங்க பின்பற்றப்பட்ட வழிமுறைகளும், பொறுப்பானவர்கள் தெரிவித்த கருத்துகளும்தான் எனக்கு பெரும் கவலை அளிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு 2-வது கட்ட பரிசோதனை மட்டும் போதாது. அதனால்தான் 3-வது கட்ட பரிசோதனை நடத்தப்படுகிறது. அந்த தரவுகள் எங்கே?

தடுப்பூசி என்பது மருந்து அல்ல. அதை ஆரோக்கியமானவர்களுக்கு செலுத்துகிறோம். அது, தடுப்பு மருந்துதானே தவிர, சிகிச்சை அல்ல. அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்ய வேண்டும்.

கோவேக்சினை மாற்று மருந்தாக ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியம் என்ன? செயல்திறன் நிரூபிக்கப்படாத இதை பயன்படுத்தலாம் என்று அர்த்தமா? அப்படியானால் அதை எடுத்துக்கொள்ள மக்கள் தயங்குவார்கள். உலக அளவில் இந்திய தடுப்பூசி தொழிலின் மரியாதை சீர்குலைந்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய மருந்துகள் ஆக்‌‌ஷன் நெட்வொர்க் என்ற அமைப்பு கூறியிருப்பதாவது:-

புதியவகை கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் செயல்படும் என்பதற்கு விஞ்ஞானரீதியான ஆதாரம் இருக்கிறதா என்று தெளிவாக தெரியவில்லை. அதன் செயல்திறன் தெரிவிக்கப்படவில்லை. அதுகுறித்த எந்த தரவுகளும் வெளியாகவில்லை.இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஆனால், ‘கோவேக்சின்’ தடுப்பூசி, புதியவகை கொரோனாவுக்கு எதிராக செயல்படும் என்பதால்தான் அதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தலைமை இயக்குனர் பலராம் பார்கவா தெரிவித்தார்.

இருப்பினும், அதன் செயல்திறன் குறித்த தரவுகள் இன்னும் வெளியாகவில்லை என்றும் அவர் கூறினார். எய்ம்ஸ்’ இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறுகையில், ‘‘கொரோனா பாதிப்பு அதிகரித்தால், கூடுதல் தேவைக்காக மட்டுமே கோவேக்சின் பயன்படுத்தப்படும். இதற்கு அனுமதி வழங்கும் பணி விரைவுபடுத்தப்பட்டது. ஆனால், எந்த மருத்துவ பரிசோதனையும் அவசரகதியில் செய்யப்படவில்லை’’ என்றார்.



Next Story