‘கடல் மணல்’ உருவாவது எப்படி?
கடற்கரைக்கு போனால் மணலில் உட்கார்ந்து மணல் வீடு செய்வோம், மணலில் குழி பறித்து விளையாடுவோம் இல்லையா? இப்படி விளையாடும்போது கடற்கரையில் இவ்வளவு மணல் எப்படி வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
கடற்கரையில் மணல் நிரம்பிக் கிடக்க அலைகளே காரணம். அலைகள் எப்போதும் கரையை ஓங்கி அறைந்தபடி கரையில் உள்ள கற்களையெல்லாம் அரித்துக்கொண்டே இருக்கின்றன. சிறுசிறு கற்களை ஒன்றோடு ஒன்று அலைகள் மோத வைக்கின்றன. இப்படிக் கற்கள் மோதிக்கொள்ளும்போது மாவரைக்கும் இயந்திரத்தில் அரைபடுவது போலக் கற்கள் அரைபட்டு கடல் மணல் உருவாகிறது.
ஒரு கடற்கரையில் குவிந்து கிடக்கும் கடல் மணல், அந்த இடத்தில் உள்ள பாறைகளிலிருந்து வந்தது என்று மட்டும் கூறிவிட முடியாது. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தின் ஹர்வாடா கடற்கரையில் உள்ள மணல், வடக்கே மகாராஷ்டிரத்திலிருந்து வந்தது. இப்படி அலையின் போக்கில் மணல் பயணிக்கவும் செய்கிறது. அது சரி, கடற்கரையில் உள்ள மணல் எந்தப் பகுதியைச் சேர்ந்தது என்று எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?
கடல் மணலில் உள்ள வேதித்தன்மை, அதி லுள்ள கனிமங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, அந்தந்த இடத்தின் பூர்வீக ரகசியங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள்.
Related Tags :
Next Story